அசத்தும் இந்தியா.. உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக விரைவில் மாறும்.. ஆனந்த் மஹிந்திரா கணிப்பு
டெல்லி: இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி பொருளாதாரத்தில் இந்தியா 5ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் தான் இந்தியா 3வது பெரிய பொருளாதாரமாக விரைவில் மாறும் எனவும், இது வெகு தொலைவில் இல்லை எனவும் தொழில்அதிபர் ஆனந்த மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல தொழில்அதிபர்களில் ஒருவராக உள்ளவர் ஆனந்த் மஹிந்திரா. இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.
இவர் நாட்டில் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள், ஸ்மார்ட்டாக செயல்படும் நபர்களின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் நாட்டில் திறமையான நபர்களையும் பாராட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் ஆனந்த் மஹிந்திராவை அதிகமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
கடும் பிரிவுகளில் வழக்குப்பதிவு.. கோவை பெட்ரோல் குண்டுவீச்சால் சாட்டையை சுழற்றும் போலீஸ் கமிஷனர்
இந்திய பொருளாதார விவாதம்
இந்த நிலையில் தான் இந்திய பொருளாதாரம் குறித்து ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேவேளையில் தான் இந்திய பொருளாதாரம் என்பது நிலையாகவும், உலக நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் சிறப்பாக உள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில் தான் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து ஆனந்த் மஹிந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா ட்விட்
இதுதொடர்பாக ஆனந்த் மஹிந்திரா, ‛‛இங்கிலாந்தை முந்தி உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. இந்தியா மீது உலக முதலீட்டாளர்களின் பார்வை விழுந்துள்ளது. இதனால் உலகின் மிகப்பெரிய 3வது பொருளாதார நாடாக மாறும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அந்த நாள் இன்னும் வெகு தொலைவில் இல்லை" என கூறியுள்ளார். மேலும் ஐஎப்சி குழுமத்தின் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ப்ளூம்பெர்க் ஆய்வு முடிவு
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்தன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. நாட்டில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையே தான் ப்ளூம்பெர்க்கின் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதன்படி 2022 மார்ச் இறுதியில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
857.7 பில்லியன் டாலர் பொருளாதாரம்
இதுதொடர்பாக ப்ளூம்பெர்க் அறிக்கையில், ‛‛2022 மார்ச்சில் முடிந்த காலாண்டின் கடைசிநாள் படி டாலர் மாற்று விகிதத்தை பயன்படுத்தி மார்ச் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் அளவு 'nominal' பண அடிப்படையில் 854.7 பில்லியன் டாலராக இருந்தது. இது பிரிட்டனில் 816 பில்லியன் டாலராக உள்ளது'' என கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிற்கும், பிரிட்டனுக்கும் இடையே பொருளாதாரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ப்ளூம்பெர்க் கூறியது குறிப்பிடத்தக்கது.