"பெண்களை தாக்குகின்றனர்.. துப்பாக்கியால் சுடுகின்றனர்.." உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் அச்சம்!
டெல்லி: உக்ரைன் நாட்டில் போர் உச்சமடைந்து வரும் சூழலில், அங்குள்ள மோசமான நிலை குறித்து மாணவர்கள் சிலர் அச்சத்துடன் விளக்கி உள்ளனர்.
உக்ரைன் நாட்டில் 6 நாட்களைக் கடந்தும் போர் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பு நாடுகளுக்கும் இடையே பெலராஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால், கீவ், கார்கிவ் உள்ளிட்ட உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூதரகம் அறிவுறுத்தல்
ஏற்கனவே, கீவ் நகரில் இருந்து இந்தியர்களை வெளியேற வேண்டும் என இந்தியத் தூதரகம் அறிவுறுத்தி இருந்தது. அதேபோ உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் இருந்தும் உடனடியாக இந்தியர்கள் வெளியேறும்படி தூதரகம் கேட்டுக் கொண்டிருந்தது. பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் கிடைக்கவில்லை என்றால் நடந்தாவது வெளியேறும்படி ஒரே மணி நேரத்தில் இரண்டாவது முறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் சிலர் அங்குள்ள நிலை குறித்து விவரித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு
இது குறித்து உகரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர் பிரகுன் கூறுகையில், "இப்போது நாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகே ஏவுகணை தாக்குதல் நடக்கிறது. அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. இங்கே ரயில் ஒன்று புறப்பட தாயாராக இருந்து. ஆனால், அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. உக்ரைன் மக்களை மட்டுமே அந்த ரயிலில் அனுமதித்தனர். நாங்கள் கேட்டால் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டுகின்றனர். இங்கே ரயில் நிலையத்திற்கு வெளியே 1,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளோம். உக்ரேனிய காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள், எங்களைத் தாக்குகின்றனர்" என்று அச்சத்துடன் தெரிவித்தார்.

குளிர் அதிகம்
ரயில்வே ஸ்டேஷனில் மூன்று மணி நேரம் காத்திருந்தும் ரயில்களில் ஏற அனுமதிக்கப்படவில்லை என மற்றொரு மாணவர் தெரிவித்துள்ளார், இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஒரு ரயில் வந்தது. நாங்கள் அதில் ஏறினோம். இருப்பினும், அங்குள்ள காவலர்கள் எங்களை கீழே இறங்கச் சொல்லிவிட்டார்கள். அங்கு பனிப்பொழிவும் குளிரும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அடுத்த ரயிலிலும் எங்களை அனுமதிப்பார்களே எனத் தெரியவில்லை. இங்குப் பல பெண் மாணவிகளும் எங்களுடன் உள்ளனர்" என்று வேதனை தெரிவித்தார்.

பெண்களைத் தாக்குகின்றனர்
உக்ரைன் நாட்டிலுள்ள மற்றொரு மாணவர் ஹிமான்ஷு, "இங்கு சுமார் 700 முதல் 800 மாணவர்கள் இருக்கலாம். இங்கு ஆயுதங்களுடன் இருக்கும் உக்ரைன் மக்கள் எங்களை ரயில்களில் ஏற விடாமல் தடுக்கின்றனர். துப்பாக்கியால் சுடுகிறார்கள். மிரட்டுகிறார்கள், பயமுறுத்துகிறார்கள். பெண்களையும் தாக்குகின்றனர். அரசு குறிப்பிட்ட 3 இடங்களுக்கு அடைய முடியுமா எனத் தெரியவில்லை. அந்த நகரங்கள் எங்கே உள்ளது என்று கூட தெரியாது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications