சமூக பரவலாக மாறிய ஓமிக்ரான்.. வரும் காலத்தில் கேஸ்கள் அதிகரிக்கலாம்.. மத்திய அரசு தரும் வார்னிங்
டெல்லி: ஓமிக்ரான் ஓமிக்ரான் கொரோனா இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டதாக மத்திய அரசின் INSACOG அமைப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஓமிக்ரான் பரவலுக்குப் பின்னர், தற்போது இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களும் கூட இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
கிராமங்களை நோக்கி பரவும் ஓமிக்ரான்..3ஆம் அலை என்ன செய்யும்? தடுப்பது எப்படி? டாப் ஆய்வாளர் விளக்கம்
சென்னை
இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது வரும் சில நாட்களில் மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நாட்டில் தற்போது உள்ள ஓமிக்ரான் பரவல் குறித்து மத்திய அரசின் INSACOG முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
சமூக பரவல்
இது குறித்து INSACOG இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஓமிக்ரான் இப்போது இந்தியாவில் சமூகப் பரவலாக மாறிவிட்டது, குறிப்பாக நாட்டில் உள்ள பல்வேறு பெருநகரங்களில் ஓமிக்ரான் கொரோனா தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் தான் மெட்ரோ நகரங்களில் கொரோனா கேஸ்கள் மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஓமிக்ரானின் புதிய BA.2 வேரியண்டும் இந்தியாவில் கணிசமாக உள்ளது. இந்த வகையை டெஸ்ட்டிங்கில் கண்டறிவதில் சற்று சிரமம் உள்ளது.
லேசான பாதிப்பு
பெரும்பாலும் இந்த ஓமிக்ரான் கொரோனா லேசான, அறிகுறியற்ற கொரோனா கேஸ்களை தான் ஏற்படுத்துகிறது. இதனால் பெரியளவில் பாதிப்பு இல்லை. இந்த 3ஆம் அலையில் மருத்துவமனைகளில் அட்மிட் ஆவோரின் எண்ணிக்கை மற்றும் ஐசியு சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அது மிகவும் ஆபத்தான நிலைக்குச் செல்லவில்லை.
இது தான் காக்கும்
வரும் காலத்தில் இந்தியாவில் சமூக பரவல் காரணமாக ஓமிக்ரான் பரவுமே தவிர வெளிநாட்டுப் பயணிகளால் பரவாது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிய வரும் நிலையில், இது தொடர்பாகத் தொடர்ந்து கண்காணிக்க INSACOG புதிய செயல்முறையை வடிவமைத்துள்ளோம். கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, வேக்சின்களை முறையாக எடுத்துக் கொள்வது ஆகியவை மட்டுமே உருமாறும் கொரோனா வகைகளுக்கு எதிராக நம்மைக் காக்கும்.
புதிய வேரியண்ட்
அதேபோல புதிதாகக் கண்டறியப்பட்ட மற்றொரு வேரியண்டான பி.1.640.2 குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.. இந்த குறிப்பிட்ட வகையை வேகமாகப் பரவும் அல்லது நோய் எதிர்ப்புச் சக்தியில் இருந்து தப்பும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும், இதைக் கவலைக்குரிய கொரோனா வகையாகவும் பட்டியலிடவில்லை. இந்த குறிப்பிட்ட பி.1.640.2 வகை கொரோனா இதுவரை இந்தியாவில் யாருக்கும் கண்டறியப்படவில்லை" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
உலகெங்கும் தொடர்ந்து கொரோனா வைரஸ் உருமாறிக் கொண்டே இருக்கும் சூழலில் அது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் INSACOG என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3.33 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல பாசிட்டிவ் விகிதமும் 17% எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.