மோடி vs கார்கே.. இவரை சாதாரணமாக எடை போட்டுறாதீங்க..விளக்கும் விமர்சகர்கள்.. பாஜகவை வீழ்த்த சான்ஸ்?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் சசி தரூரை வீழ்த்தி மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்று இருக்கும் நேரத்தில் அவர் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் மற்றும் அதை அவரால் இதை சமாளிக்க முடியுமா என்பது குறித்து விரிவாக காண்போம்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதியான நேற்று காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
காங்கிரஸ் தேர்தலில் முறைகேடு.. போர்க்கொடி தூக்கிய சசிதரூர் தரப்பு.. திடீரென சமாதானம் ஆனது எப்படி?
தேர்தல் முடிவு
அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 தேதி தொடங்கி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் நேருக்கு நேர் மோதினர். கடந்த 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று இன்று முடிவுகள் எண்ணப்பட்டது. இதில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றுள்ளார்.
யார் இந்த கார்கே?
மல்லிகார்ஜுன கார்ஜுன கார்கே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தலித் குடும்பத்தில் பிறந்து இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார். 1969 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் நீண்ட அரசியல் அனுபவமும் காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய தலைவராகவும் திகழ்ந்து வருகிறார். உயர்சாதியினர் அதிகம் வசிக்கும் குர்முட்கள் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக 9 முறை வென்றுள்ளார். சிதார்பூர் தொகுதியிலும் ஒருமுறை இவர் வென்று இருக்கிறார்.
சவால்கள்
மல்லிகார்ஜுன கார்கே தலைவரானால் காந்தி குடும்பத்தின் ரிமோட் கண்டிரோலாக இருப்பார் என்ற விமர்சனங்கள் உள்கட்சியில் இருந்தும் எதிர்க்கட்சியிலிருந்தும் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த பெயரை மாற்றியாக வேண்டிய கட்டாயம் கார்கேவுக்கு உள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவி வரும் உட்கட்சி பூசலை களைந்தும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதேபோல் காந்தி குடும்பத்தின் அபிமானிகள் காங்கிரஸில் அதிகம் இருப்பதால் அவர்களின் ஆதரவை தக்கவைக்க வேண்டும்.
தேர்தல்
ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சி உட்கட்சிப்பூசல்கள் முடிந்து தலைவர் தேர்தலை நடத்தி முடித்திருக்கும் சூழலில், ஆளும் பாஜகவோ குஜராத், இமாச்சல் சட்டமன்றத் தேர்தல், 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஒருபக்கம் சாஃப்ட் இந்துத்துவா என்ற பெயரும் மறுபக்கம் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பெயரும் காங்கிரஸுக்கு நிலையான வாக்குகளை ஏற்படுத்தித்தர தவறிவிடுகிறது. இதனை அவர் சரி செய்ய வேண்டும்.
பாஜகவை சமாளிப்பாரா?
2019 மக்களவைத் தேர்தலில் 545 இடங்களில் 53 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடிந்தது. ஆனால், பாஜகவோ 303 இடங்களில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. தொடர்ந்து மாநில தேர்தல்களிலும் வெற்றியை குவித்து வருகிறது. இப்படி பலமான பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் குடும்பத்தை சாராத மல்லிகார்ஜுன கார்கேவால் முடியுமா? என்று கேட்டால் அரசியல் விமர்சகர்கள் பலரும் ஆம் என்றே சொல்கின்றனர்.
அனுபவ அரசியல்வாதி
இதற்கு காரணம், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள், உட்கட்சிப்பூசல்கள் ஏற்படும்போதெல்லாம் மல்லிகார்ஜுன கார்கே மேலிட பொறுப்பாளராக பல சச்சரவுகளை தீர்த்தவர் என்று கூறுகின்றனர். பல்வேறு விவகாரங்கள் நிதானமாக செயல்பட்டு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்றும், மற்றவர்களிடம் எளிதில் சண்டையிட்டுக் கொள்பவர் எனவும் கூறுகிறார் அரசியல் விமர்சகர் கே பெனெடிக்ட்.
சாதாரணமானவர் இல்லை
இதுகுறித்து பத்திரிகையாளர் பூர்ணிமா ஜோஷி தெரிவிக்கையில், "கட்சிக்கு இளம் ரத்த பாய்ச்சுவதற்கு துடிப்பானவர் கார்கே கிடையாது. அவர் கண்ணியமான மனிதர். ஆழமான அரசியல்வாதி. அவரை சாதாரணமானவர் என்று எளிதில் எடைபோட்டுவிட மாட்டார்கள். ஆனால், காங்கிரஸை மறுகட்டமைப்பு செய்யும் தலைவர் என்ற இடத்தில் கார்கேவை வைத்து பார்க்க முடியாது.
மக்களை கவரலாம்
மோடி - ஷா கூட்டணியை அகற்ற இவர் சரியான ஆள் இல்லை. பாஜகவை அதன் சொந்த வழியிலேயே வீழ்த்தக்கூடிய ஆள் தேவை. பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்கொள்ளபவராக மல்லிகார்ஜுன கார்கே இருப்பார். அதேபோல் இருபக்கங்களை ஒப்பீடு செய்து பார்த்தால் மக்கள் ஆதரவு கார்கே பக்கம் இருப்பதற்காக வாய்ப்புகள் உள்ளன. அந்த அம்சத்தை வைத்து இவரை நோக்கலாம்." என்றார்.