இஸ்ரோ தலைவர்... கே.சிவனின் பதவிக்காலம் ஒரு ஆண்டு நீட்டிப்பு... மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக உள்ள கே.சிவனின் பதவிக்காலத்தை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கே.சிவன், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளி திட்டங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்தியாவின் சாதனை திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கே.சிவன் தலைமையில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இஸ்ரோ தலைவர்
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கே.சிவன், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராகவும், இந்திய விண்வெளித் துறையின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் இஸ்ரோ விஞ்ஞானியாக 1982ஆம் ஆண்டு இணைந்தார்.
முக்கிய பங்களிப்பு
இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், பிஎஸ்எல்வி திட்டத்தில் முக்கியப் பணி ஆற்றினார். கடந்த 33 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் சிவனின் பங்களிப்பு இருந்தது. கே.சிவன் 2018ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டார்.
சாதனைகள் நிகழ்த்தினார்
இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியது. குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளத்தை அமைத்து வருவது, ஒரே ராக்கெட்டில் அதிக எண்ணிக்கையிலான செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியது, செயற்கைகோள்களை புவி வட்டப்பாதையில் ராக்கெட்டுகள் நிலைநிறுத்துவதை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நேரலையாக பார்க்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது உள்பட விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் கே.சிவனுக்கு சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளது.
தீவிர பணி
சிறிய வகை செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. என்ற புதிய வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. அத்துடன் இந்தியாவின் சாதனை திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் பணியிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கே.சிவன் தலைமையில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
ஒரு ஆண்டு நீட்டிப்பு
இந்த நிலையில் கே.சிவனின் பதவிகாலம் வருகிற ஜனவரி 14-ந் தேதியோடு நிறைவடைகிறது. விண்வெளித்துறை செயலாளராக பணியாற்றி வருவதாலும், பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்கவும் கே.சிவனின் பதவிக்காலத்தை வருகிற 2022 ஜனவரி 14-ந்தேதி வரை ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது பதவி நீட்டிப்புக்கு அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.