மொத்தம் 9 ஆண்டுகள்.. 9 கேள்விகளை கேட்ட காங்கிரஸ்.. பிரதமர் மோடி பதிலளிக்கவும் வலியுறுத்தல்.. ஆஹா
டெல்லி: நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அவருக்கு 9 கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாஜக கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இன்றுடன் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் இந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மீதும் பாஜக ஆட்சியின் மீதும் பல்வேறு விமர்சனங்களை வைத்து காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் 'ஒன்பது ஆண்டுகள், ஒன்பது கேள்விகள்' எனும் புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நரேந்திர மோடி பிரதமராக 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் பதவியேற்றார். எனவே அவரிடம் காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை கேட்க விரும்புகிறது.
எனவே இந்த கேள்விகள் குறித்து பிரதமர் மௌனம் கலைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாடு முழுவதும் ஏன் பணவீக்கமும் வேலையின்மையும் அதிகரித்து வருகிறது? பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகவும் மாறுவது ஏன்?
- விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மூன்று சட்டங்கள் ரத்து செய்யப்பட்டபோதும், விவசாயிகளுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏன் மதிக்கப்படவில்லை? குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஏன் சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்படவில்லை? எல்லாவற்றைவிட முக்கியமாக ஏன் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரவில்லை?
- நாடு முழுவதும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நீடித்து வரும் நிலையில் கூட ஏன் பொதுச் சொத்துக்கள் பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்பட்டது? மோடியின் நண்பர் அதானிக்கு ஏன் எல்ஐசியிலும், எஸ்பிஐயிலும் சாமானிய மக்கள் போடப்பட்ட சேமிப்பு ஏன் பணயமாக வைக்கப்பட்டது?
- பாஜக ஆளும் மாநிலங்களில் தலைவிரித்தாடும் ஊழல் குறித்து ஏன் மொளனம் காக்கிறீர்கள்? மக்களை ஏன் சிரமப்பட வைக்கிறீர்கள்? இதன் மூலம் ஏன் ஏமாற்றுக்கார்களை தப்பிக்க வைக்கிறீர்கள்?
- தேசிய பாதுகாப்பு பிரச்னை குறித்து முக்கியமான கேள்வி எழுப்பப்பட விரும்புகிறோம். கடந்த 2020ம் ஆண்டு சீனாவுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்ட பின்னரும் கூட ஏன் சீனா நமது நாட்டின் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது?
- மற்றொருபுறம் தேர்தல் ஆதாயங்களுக்காக ஏன் வெறுப்பு அரசியல் விதைக்கப்படுகிறது? மக்களை ஏன் அச்சத்தின் பிடியிலேயே வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?
- பெண்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கையை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
- கடந்த 9 ஆண்டுகளில் நமது அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளை ஏன் பலவீனப்படுத்தியுள்ளீர்கள்? உங்களது ஆட்சிக் காலத்தில் ஏன் ஜனநாயகம், கூட்டாட்சி ஆகியவை பாதிக்கப்பட்டிருக்கிறது?
- எதிர்க்கட்சிகளின் தலைவர்களை பழிவாங்கும் அரசியல் செய்வது ஏன்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் ஏன் அப்பட்டமான பண பலத்தை பயன்படுத்துகிறீர்கள்?
- கொரோனா தொற்றில் நாடு முழுவதும் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு இந்த அரசு ஏன் இழப்பீடு வழங்க மறுத்தது? அதற்கு மாறாக லாக்டவுனை போட்டு கோடிக்கணக்கான மக்களை வேதனையில் ஆழத்தினீர்கள். அவர்களுக்கும் கூட எந்த உதவியும் செய்யப்படவில்லையே ஏன்?

இந்த கேள்விகளுக்கு பதிலை கேட்டால் எங்களை 900 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லாமல், கடந்த 9 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை மட்டும் கூறுங்கள். மக்கள் இதனை கேட்க விரும்புகிறார்கள். நீங்கள் இந்நாட்டிற்கு செய்த துரோகத்திற்கு அடுத்த 5 நாட்கள் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.












Click it and Unblock the Notifications