சறுக்கிய மேக் இன் இந்தியா திட்டம்.. போதிய உற்பத்தியில்லை.. ஆயுதப் பற்றாக்குறை ஏற்படும் நிலை!
டெல்லி: 'மேக் இன் இந்தியா' திட்டம் மூலம் போதுமான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படாத நிலையில் தற்போது இந்தியா ஆயுத பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2014ல் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த நிலையில், பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி 'மேக் இன் இந்தியா' திட்டத்தை அமல்படுத்தினார்.
இதன் காரணமாக ஆயுதங்கள் முதல் குண்டூசி வரை இந்தியாவில் தயாரிக்கப்படுவது ஊக்கப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது தற்போது நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்தியா- வங்கதேச உறவு அடுத்த 25 ஆண்டுகளில் புதிய உச்சத்தைத் தொடும்: பிரதமர் மோடி நம்பிக்கை
2030க்குள்
இந்தியாவின் விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவத்தில் இருக்கும் ஆயுதங்கள் தற்போது காலாவதியாகி வருகின்றன. இந்நிலையில் புதிய ஆயுதங்களை வாங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. ஆனால் இந்த ஆயுதங்களை வெளிநாடுகளிலிருந்து வாங்க முடியாது. இதன் காரணமாக 2026 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கு ஹெலிகாப்டர்கள் பற்றாக்குறையாகவும், 2030 ஆம் ஆண்டில் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் பற்றாக்குறையும் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேக் இன் இந்தியா?
கடந்த 2014ல் அறிவிக்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் போதுமான அளவு ஆயுதங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யாததால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல ஆயுதங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவும் மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் மூலம், ஆயுதங்கள் இறக்குமதியில் 30-60% உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற விதி அமலில் உள்ளது.
ராணுவ வீரர்களின் தேவை
இதற்கு முன்னர் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை. கடந்த 2020ல் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதல் ராணுவ வீரர்களின் தேவையை இரண்டு மடங்காக ஆக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கருத்துக்களை கேட்டு ப்ளூம்பெர்க் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்பிய மெயிலுக்கு தற்போதுவரை பாதுகாப்பு அமைச்சகம் பதிலளிக்கவில்லை. பெங்களூரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் எட்டு உள்நாட்டு தேஜாஸ் போர் விமானங்களை மட்டுமே தயாரிக்க முடியும்.
ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள்
ஆனால் 2026ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை இரு மடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் உக்ரைனில் ரஷ்யாவின் போரினால் இதற்கான மூலப்பொருட்களின் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இது மேலும் தாமதமாகக்கூடும் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக 2030ஆம் ஆண்டுக்குள், இந்திய விமானப்படையில் 30க்கும் குறைவான போர்ப் படைகள் இருக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. விமானங்களை போலவே ஹெலிகாப்டர்களும் சிக்கலில் உள்ளன.
நிவர்த்தியாகாத எதிர்பார்ப்பு
தற்போது ராணுவம் மற்றும் விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர்களில் 80% ஏற்கெனவே 30 ஆண்டுகளை கடந்துவிட்டது என பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவற்றை சீரமைக்க உதிரி பாகங்கள் தேவை. ஆனால் மேற்குறிப்பிட்டது போல 'மேக் இன் இந்தியா' திட்டம் அறிமுகமாகி 8 ஆண்டுகளை கடந்த பின்னரும் இந்த பொருட்களை உற்பத்தி செய்வதில் தொடர்ந்து பின்னடைவு நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.