ஜாமியா துப்பாக்கிச் சூடு.. குற்றவாளியின் சிகப்பு நிற பை பறிமுதல்.. பையை ஆராய்ந்த போலீஸார் அதிர்ச்சி
டெல்லி: ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய 17 வயது சிறுவனின் முதுகில் சிகப்பு நிற பை இருந்தது வீடியோவில் தெரியவந்தது. அந்த பை அங்கிருந்த அலுவலகம் அருகே கண்டெடுக்கப்பட்டது.
ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர்கள் பேரணியாக சென்றனர்.
அந்த பேரணியில் 17 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் நுழைந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கியும் மாணவர்களை நோக்கியும் சுட்டார்.
வேடிக்கை
இதில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஷாதாப் என்ற மாணவனுக்கு இடது கையில் தோட்டா பாய்ந்தது. இதையடுத்து அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் நேற்று வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பே போலீஸார் அதை தடுக்கவில்லை என்றும் அந்த நபர் சுடும் வரை வேடிக்கை பார்த்தார் என்றும் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வீடியோ காட்சிகள்
இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்த சாலையில் உள்ள பதிவாளர் அலுவலகத்தின் வெளியே சிகப்பு நிறத்தில் ஒரு பை இருந்தது கண்டெடுக்கப்பட்டது. அந்த பைக்கு யாரும் சொந்தம் கொண்டாடாததால் அது அந்த அலுவலகத்தில் இருந்தது. அந்த பையை மாட்டிக் கொண்டு அந்த சிறுவன் நடந்து வந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியிருந்தது.
அயோத்தி
இதையடுத்து அந்த பையை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த பையில் ஒரு பேப்பர் இருந்தது. அதில் "Mandir Wahi Banayenge" என எழுதப்பட்டிருந்தது. இந்த முழக்கத்தை இந்துத்துவா அமைப்புகள் எழுப்புவது வழக்கம். அதாவது அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலை கட்டுவதுதான் இவர்களின் எண்ணமாகும்.
12-ஆம் வகுப்பு
மேலும் அந்த பேப்பரில் வலது புறத்தில் ஆரஞ்ச் நிறத்தில் இரு கொடிகள் வரையப்பட்டிருந்தன. ஒரு காமர்ஸ் புத்தகம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கவுதம புத்தர் நகரில் உள்ள ஜேவார் பப்ளிக் பள்ளியின் சீருடையின் ஒரு அங்கமான "டை" இருந்தது. அந்த பள்ளியின் விடைத்தாள்களும் இருந்தன என போலீஸார் தெரிவித்தனர். மேலும் அந்த விடைத்தாள்கள் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டமாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.