வங்க கடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது!
டெல்லி: வங்க கடலில் உருவான ஜாவத் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. தற்போது ஒடிஷா கரையோரம் மையம் கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மேற்கு வங்க கரையை அடுத்த 12 மணிநேரத்தில் நெருங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜாவத் புயலானது நேற்று மாலை வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. இது மேற்கு மத்திய வங்க கடலில் ஒடிஷாவின் பூரி அருகே நிலை கொண்டுள்ளது.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன கையோடு கமல்ஹாசன் எங்கே போனார் தெரியுமா?..
வலுவிழந்த நிலையில்...
இன்று நண்பகல் மேலும் வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பூரி கடற்கரையை கடக்கும். பின்னர் அது மேலும் வலுவிழந்து அடுத்த 12 மணிநேரத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் கடற்கரையை நெருங்கும்.
அதிகனமழை
இதனால் வடக்கு ஒடிஷா, மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளில் இன்று கனமழை முதல் அதிக கனமழை பெய்யும். அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தயார் நிலையில் மேற்கு வங்கம்
ஜாவத் புயல் காரணமாக மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா, மெதினிப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினரும் முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளனர். தற்போது ஒடிஷா, மேற்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
ஒடிஷாவில் கனமழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்காக 230 கி.மீ. தொலைவிலும் ஒடிஷாவின் கோபால்பூரில் இருந்து தெற்கு- தென்மேற்காக 130 கி.மீ தொலைவிலும் பூரியில் இருந்து தெற்கு தென்மேற்காக 180 கி.மீ. தொலைவிலும் பாரதீப்பில் இருந்து தெற்கு தென்மேற்காக 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது. ஒடிஷாவின் கஞ்சம், பூரி, கோர்தா, ஜகத்சிங்பூர், கேந்தராபாரா, கட்டாக் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு கனமழை முதல் அதி கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.