அனல் பறக்கும் ஜார்க்கண்ட்.. திடீரென களமிறங்கிய அமலாக்கத்துறை.. ரெய்டுகளில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி!
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அம்மாநில ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் செளபேவுக்கு சொந்தமான இடங்களில் செவ்வாய்க்கிழமையன்று அதிரடி சோதனை நடத்தினர். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி, ராய்ப்பூர் உள்ளிட்ட வினய் குமார் செளபேவுக்கு சொந்தமான 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 13, நவம்பர் 20 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் தேர்தல் களத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் களமிறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் செளபேவுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனையை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் முதன்மை செயலராக இருந்தவர்தான் இந்த வினய் குமார் செளபே.
ஏற்கனவே டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசும் மதுபான கொள்கையில் சிக்கி இருக்கிறது. இதனால் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவால் தமது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications