வேலை வாய்ப்பை உருவாக்குவதில் மோடி அரசு புதிய சாதனை.. புகழ்ந்து தள்ளிய ஐஎம்எப் முன்னாள் இயக்குநர்
டெல்லி: வேலை வாய்ப்பு பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜகவை கடுமையாக சாடி வரும் நிலையில், முன்னாள் ஐம்எஃப் இயக்குநர் சுர்ஜித் பல்லா, "வேலை வாய்ப்பை உருவாக்குவதில் மோடி அரசு புதிய சாதனை படைத்துள்ளது. மோடியின் ஆட்சி காலத்தில் தான் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.
நாட்டின் 18 வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 2 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. இதில் தேர்தல் வாக்குறுதிகளை ஆளும் பாஜகவினர் நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக பிரதமர் மோடி, தனது தேர்தல் பிரசாரத்தில் அளித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதாக கூறிய பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த பிறகு பக்கோடா போட சொன்னதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் லோக்சபா தேர்தல் பிரசாரத்திலும் மோடியை, வேலை வாய்ப்பு பிரச்சினையை முன்வைத்து கடுமையாக சாடி வருகின்றன.
இந்த நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்து இருப்பதாக சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார். ஐஎம் எப் முன்னாள் இந்திய நிர்வாக இயக்குனரும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினருமான சுர்ஜித் பாலா, இது தொடர்பாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தற்போதைய பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் தான் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மோடி ஆட்சியின் கீழ் கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில் 10 மில்லியன் அதாவது சுமார் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2004 முதல் 2013 வரை ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில்தான் மிக குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
நமது நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மோடியின் திறமையான நிர்வாகத்தின் கீழ் இந்த வேலை வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அன்னிய நேரடி முதலீடு குறைந்து வருவதாக இருந்தால்.. அதற்கு அமைய உள்ள புதிய அரசில் தீர்வு காணப்பட வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் பாஜக தனித்தே 330 முதல் 350 இடங்கள் வரை வெற்றி பெறும் என நான் கருதுகிறேன்” என்றார்.
முன்னதாக கடந்த வாரம் சுர்ஜித் பல்லா அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் பாஜக 5 இடங்களில் வெற்றி பெறும். கூடுதலாக வென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. கேரளாவில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வெற்றி கிடைக்கலாம். மக்களின் வாழ்க்கையில் எந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற அடிப்படையில்தான் இந்திய மக்கள் வாக்களிக்கிறார்கள்.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது, வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது என எதிர்க்கட்சிகள் எப்போதும் கூறி வருகின்றன. இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டை விட வேலைவாய்ப் பின்மை குறைவாகவே தற்போது உள்ளது” என்று பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications