கர்நாடகாவில் கொட்டும் கனமழை.. காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..இன்று கூடும் மேலாண்மை ஆணையம்!
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்கே ஹல்தர் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. கர்நாடகாவில் கனமழை கொட்டி காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடகா திறந்துவிடுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடிப்படையில் காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டன. கர்நாடகாவில் மழை அளவு, அணைகளின் நீர் அளவு உள்ளிட்டவைகளை ஆராய்ந்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் பகிர்வு அளவை பரிந்துரைப்பதுதான் காவிரி ஒழுங்காற்று குழு. இந்த குழுவானது காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைக்கும். இதனை பரிசீலனை செய்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட உத்தரவிடக் கூடியது காவிரி மேலாண்மை ஆணையம்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் கடந்த ஏப்ரல் 4-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான 3.6 டிஎம்சி தண்ணீரை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்குரியது) கர்நாடகா உடனே திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழ்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் கர்நாடகா அதிகாரிகளோ, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறக்கவே முடியாது என்றனர். கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது எனவும் அவர்கள் தரப்பு சுட்டிக்காட்டியது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனையும் கர்நாடகா அரசு ஏற்க மறுத்து தண்ணீரை திறந்துவிடவில்லை.
இந்த நிலையில் கர்நாடகாவில் கடந்த பல நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர், மண்டியா மாவட்டங்களில் மழை வெளுக்கிறது. இதனையடுத்து காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு கர்நாடகா அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
இந்தப் பின்னணியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இன்றைய கூட்டத்திலாவது தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடுமா? என்பது எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications