ஒரே வாரத்தில் ’டைவ்’ அடித்த 3 முக்கிய தலைவர்கள்.. இப்படி இருந்தா காங்கிரஸை எப்படி பலப்படுத்துறது?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி ஆவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 10 நாட்களில் மட்டும் சுனில் ஜாக்கர், ஹர்திக் படேல், கபில் சிபல் என அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2024 தேர்தலை எதிர்கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கட்சித் தலைமை எடுத்து வரும் நிலையில், முக்கிய தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி வருவது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜி23
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ராகுல் காந்தி தலைவர் பதவிலியிருந்து விலகினார். அதைத்தொடர்ந்து இடைக்கால தலைவராக சோனியா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், 'கட்சிக்கு நிரந்தர தலைமை தேவை. கட்சி நிர்வாகத்தில் சீர்திருத்தம் தேவை' என, சோனியாவுக்கு, ஜி23 தலைவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். அதில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபலும் ஒருவர்.

177 எம்.எல்.ஏக்கள்
கபில் சிபல் கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சித் தலைமை மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார். அதனாலேயே கட்சித் தலைமையும் அவரை ஒதுக்கியே வைத்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து 177 எம்பிக்கள், எம்எல்ஏக்கள், 222 வேட்பாளர்கள் கட்சி தாவியுள்ளனர். எந்த அரசியல் கட்சியிலும் இப்படி நடந்ததில்லை எனத் தெரிவித்திருந்தார் கபில் சிபல்.

ராகுல் மீது அதிருப்தி
ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உண்மையில் அவர் தலைவர் போலத்தான் செயல்பட்டு வருகிறார். முக்கிய முடிவுகளை அவர்தான் எடுத்து வருகிறார். அவரை அதிகாரப்பூர்வமாக தலைவராக்கினாலும் கூட அது எந்த வகையிலும் மாற்றத்தைக் கொடுக்காது. ஒரு வீட்டுக்காக காங்கிரஸ் கட்சி இருக்கக் கூடாது. மக்களுக்காக, நாட்டுக்காக, தொண்டர்களுக்காக, வளர்ச்சிக்கான காங்கிரஸாக இருக்க வேண்டும் என அண்மையில் தெரிவித்திருந்தார் கபில் சிபல்.

எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய மம்தா பானர்ஜி, சரத் பவார் போன்றோர் மீண்டும் திரும்ப வேண்டும். ஒருங்கிணைய வேண்டும். எந்தக் கட்சியையும் சேராத கோடிக்கணக்கானோர் இந்த நாட்டில் உள்ளனர். அவர்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களை கட்சி அரவணைக்க வேண்டும், கவர வேண்டும் என கபில் சிபல் தெரிவித்திருந்தார். கபில் சிபலின் இந்தப் பேச்சுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கபில் சிபல்
இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர் கபில் சிபல், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கடந்த 16ஆம் தேதியே தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹர்திக் படேல்
முன்னதாக, கடந்த வாரம் ஹர்திக் படேல் காங்கிரஸில் இருந்து விலகினார். 2015-ம் ஆண்டு குஜராத்தில் சக்திவாய்ந்த பட்டிதார் சமூக இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹர்திக் படேல், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸில் சேர்ந்தார். அவர் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராகவும் இருந்தாா். கட்சியில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து கூறி வந்த ஹர்திக் படேல் கடந்த 18ஆம் தேதியன்று அக்கட்சியில் இருந்து விலகினார்.

சுனில் ஜாக்கர்
பஞ்சாப் மாநிலத்தில் 2017 முதல் 2021 வரை காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சுனில் ஜாக்கர். அம்மாநில எம்.எல்.ஏவாகவும், மக்களவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். நவஜோத் சித்துவை காங்கிரஸில் தலைவராக்குவதற்காக, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சுனில் ஜாக்கர் விலக்கப்பட்டார். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அம்மாநில காங்கிரஸில் குழப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் கடந்த 14ஆம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் சுனில் ஜாக்கர்.

உதய்பூர் மாநாடு
காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தவும், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதற்கு முன்பாக நடைபெற உள்ள பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுக்கவும் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர்கள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி வருவது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

10 நாட்களில்
கடந்த 10 நாட்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கியமான தலைவர்கள் 3 பேர் விலகியிருப்பது தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கட்சித் தலைமை எடுத்து வரும் நிலையில், முக்கிய தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி வருவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications