இந்தியாவில், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி.. அவசர கால பயன்பாட்டுக்கு நிபுணர் குழு பச்சைக்கொடி
டெல்லி: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக் மற்றும் ஃபைசர் தாக்கல் செய்த கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கான அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்கான விண்ணப்பங்கள் இன்று அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் பரிசீலிக்கப்பட்ட நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஓகே கூறப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்தக நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் பாரத் பயோடெக் ஆகியோரால் உருவாக்கப்பட்ட 'கோவிஷீல்ட்' தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் நிறுவனம். இதேபோல பாரத்பயோடெக் நிறுவனம், தங்களின் 'கோவாக்சின்' தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் கூட்டு சேர்ந்து உருவாக்குகிறது.
கடந்த புதன்கிழமை இதுபோல ஒரு கூட்டம் நடந்தபோது பைசர் நிறுவனம் கூடுதல் கால அவகாசம் கேட்டதால், எந்த முடிவும் எட்டப்படவில்லை.
நாளை பல மாநிலங்களிலும் தடுப்பூசி டிரையல்கள் நடத்தப்படும் நிலையில், இன்று நிபுணர் குழு மீட்டிங் நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை நடந்த ஒரு நிகழ்வில், மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் டாக்டர் வி.ஜி. சோமானி, "மகிழ்ச்சியான புத்தாண்டாக மாறும் என்ற நம்பிக்கையுள்ளது" என்று தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளர் சீரம் நிறுவனம்தான். ஏற்கனவே ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா வேக்சினின் சுமார் 50 மில்லியன் டோஸ் தயாரித்துள்ளது அந்த நிறுவனம். மார்ச் மாதத்திற்குள் அதை 100 மில்லியனாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
உலகின் எடை குறைந்த செயற்கைகோளை உருவாக்கிய தஞ்சை மாணவர்.. ஜூனில் விண்ணுக்கு அனுப்பும் நாசா
சீரம் நிறுவனத்துடன் இந்திய அரசு இன்னும் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும், முதலில் இந்திய சந்தையில் கவனம் செலுத்துவதாகவும், பின்னர் தெற்காசிய நாடுகள் மற்றும் ஆபிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிலையில்தான், கோவிஷீல்டு தடுப்பூசியில் தங்களுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இந்த பரிந்துரையையடுத்து, விண்ணப்பங்கள் இறுதி ஒப்புதலுக்காக இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு (டி.சி.ஜி.ஐ) செல்லும். இந்த மாதத்திலிருந்து தடுப்பூசி போடும் பணிகளை ஆரம்பிக்க அரசு விரும்புவதால், ஒப்புதல் வேகமாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.