"ஏர் இந்தியா விமானத்தை தாக்க போறோம்!" காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்! அடுத்து சொன்ன பகீர் வார்த்தை
டெல்லி: ஏர் இந்தியா விமானத்திற்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் வகையில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியாவில் பயணிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினை கோரும் இயக்கங்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மற்ற நாடுகளில் காலிஸ்தான் இயக்கம் தடை செய்யப்பட்ட ஒன்று இல்லை.

இதன் காரணமாகவே கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறார்கள். அப்படி வெளிநாட்டில் இருந்து இயக்கும் காலிஸ்தான் இயக்கம் மிரட்டல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பகிரங்க மிரட்டல்: அதாவது ஏர் இந்தியா விமானத்திற்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் வகையில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நவம்பர் 19ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கத் திட்டமிடும் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
அந்த வீடியோவில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மேலும் கூறுகையில், "வரும் நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் செல்ல வேண்டாம் என்று சீக்கிய மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். சர்வதேச அளவில் முற்றுகை இருக்கும். நாங்கள் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறோம். அதாவது நவம்பர் 19ஆம் தேதி, ஏர் இந்தியாவில் பயணம் செய்ய வேண்டாம் அல்லது உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும்" என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி ஏர்போர்ட்: மேலும், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நவம்பர் 19 அன்று மூடப்படும் என்றும் அதன் பெயர் மாற்றப்படும் என்றும் பன்னுன் அந்த வீடியோவில் கூறியுள்ளார். நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெறும் இந்த நாளில் தான் இதெல்லாம் நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், அவர் இந்த வீடியோவில் இந்திய தலைவர்கள் குறித்தும் சில சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார்.
குர்பத்வந்த் சிங் பன்னுன் அமெரிக்காவைச் சேர்ந்த நீதிக்கான சீக்கியர்கள் (SFJ) என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார். முன்னதாக கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அவர் இதேபோல வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இஸ்ரேல்- பாலஸ்தீனப் போரில் இருந்து இந்தியப் பிரதமர் மோடி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அதேபோன்ற ஒரு நிலை இந்தியாவில் ஏற்படாமல் இருப்பது அரசின் கைகளில் தான் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பகீர் வீடியோ: பஞ்சாப் முதல் பாலஸ்தீனம் வரை எந்த இடமாக இருந்தாலும் ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்வினை இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், ஆக்கிரமிப்புக்கு எதிராக மிகப் பெரிய வன்முறை இருக்கவே செய்யும் என்று வீடியோவில் கூறியிருந்தார். இந்தச் சூழலில் ஏர் இந்தியா விமானத்திற்குப் பகிரங்க மிரட்டல் விடுத்து பன்னுன் வெளியிட்டுள்ள வீடியோ பகீர் கிளப்புவதாகவே இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்த குர்பத்வந்த் சிங் பன்னுன், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தேசிய புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பில் இருக்கிறார். பயங்கரவாத செயல்களைத் திட்டமிடுவது, அரங்கேற்றுவது என இவர் மீது பல்வேறு புகார்கள் முன்வைக்கப்படுகிறது. பஞ்சாப் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மிரட்டல் விடுப்பதாக இவர் மீது பகீர் புகார்கள் இருக்கவே செய்கிறது.
தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் குர்பத்வந்த் சிங்கிற்கு எதிராகக் கடந்த 2021 பிப். மாதம் தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை பிறப்பித்தது. மேலும் அவர் கடந்த ஆண்டு நவம்பர் 29 அன்று தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications