விடாத எதிர்க்கட்சி எம்பிக்கள்.. 4வது நாளாக முடங்கிய லோக்சபா.. சோனியா தலைமையில் ஆர்ப்பாட்டம்
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலையொட்டி அங்கு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் முறையை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்ததால் 4வது நாளாக சபை முடங்கியது. இன்று மதியம் 2 மணி வரை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மழைக்கால கூட்டத்தொடரின் 4வது நாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதுமே பீகார் சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் லோக்சபாவில் கோரிக்கை வைத்தனர். ஆனால் சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்க மறுத்தார்.
இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கோபமான ஓம்பிர்லா, ‛‛நாடாளுமன்றம் மக்கள் பிரச்சனைகளை பற்றி விவாதிக்க வேண்டிய இடம். இப்படி தினமும் கூச்சல், அமளி செய்வதால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது. அமைதியாக இருக்கைகளில் அமருங்கள்'' என்று கூறினார்.
ஆனால் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் கேட்கவில்லை. அவர்கள் தொடர்ந்து அமளி செய்தனர். இதையடுத்து லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவை எடுத்து கொண்டால் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள், நியமன எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர். மேலும் இன்றுடன் பதவி காலம் காலியாகும் வைகோ உள்பட பிற எம்பிக்கள் பிரிவு உபசார உரையை நிகழ்த்தி வருகின்றனர்.
முன்னதாக இன்று காலை நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் ‛இந்தியா’ கூட்டணி எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து பீகார் சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று பேனர்களை காட்டியும், கோஷமிட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications