"ஐயோ.. அடுத்து நம்ம பக்கம் வருவாங்களே!" கலகத்தில் மகாராஷ்டிர காங்.. கூலாக இருக்கும் டெல்லி தலைமை
டெல்லி: மகாராஷ்டிர கூட்டணி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியும் கலகத்தில் உள்ளது.
மகாராஷ்டிராவில் ஷிண்டே தொடங்கி வைத்து நெருப்பு இப்போது ஜகஜோதியாக பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. பெரும்பாலான சிவசேனா எம்எல்ஏக்களின் ஆதரவு ஷிண்டேவுக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் மகாராஷ்டிராவில் மகா விகாஸ் கூட்டணி அரசு கவிழ்வது கிட்டதட்ட உறுதியாக விட்டது. அது எப்போது நடக்கும் என்பதே இப்போது கேள்வியாக உள்ளது.
அடேங்கப்பா... மகாராஷ்டிர சட்டசபை இடைத்தேர்தலில் பாஜகவிற்கு பலத்த அடி கொடுத்த காங்கிரஸ்.. அமோக வெற்றி
காங்கிரஸ்
இது சிவசேனாவுக்கு மட்டுமில்லை காங்கிரசுக்கும் தலைவலியைக் கொடுத்துள்ளது. கோவா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா எனப் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் அப்படியே பாஜகவுக்கு ஜம்ப் ஆவதை எல்லாம் நாம் கடந்த காலங்களில் பார்த்துள்ளோம். எனவே, அதேபோல மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் சாய்ந்துவிடுவார்களோ என மாநிலத் தலைமை அஞ்சுகிறது. இதனால் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்கள் கவலையடைந்துள்ளனர்.
மாநில காங்கிரஸ்
கட்சியில் இருக்கும் பல எம்எல்ஏக்கள் எளிதாகக் கட்சி மாறும் மன நிலையில் இருப்பதால், இந்தச் சூழலில் அனைத்து எம்எல்ஏக்களையும் ஒன்றாக வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் இருப்பினும் டெல்லி தலைமை இதில் உண்மையான அக்கறை காட்டவில்லை என்றும் மகாராஷ்டிரா காங்கிரஸில் ஒரு பிரிவினர் புலம்புகின்றனர். நேற்றிரவு மும்பை சென்ற கமல்நாத் மூத்த நிர்வாகிகள் உடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
கமல்நாத்
காங்கிரஸ் கட்சிக்கு மகாராஷ்டிராவில் மொத்தம் 44 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் 41 பேரை கமல்நாத் நேரடியாகச் சந்தித்துப் பேசியுள்ளார். மீதமுள்ள மூன்று பேருடன் தொலைப்பேசி வழியாகப் பேசியுள்ளார். மும்பை வந்திருந்த கமல்நாத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். அதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உடனும் தொலைப்பேசியில் பேசியுள்ளார்.
அவ்வளவுதான்
இதையடுத்து மகாராஷ்டிராவில் இப்பொழுது உள்ள நிலைமை குறித்த அவர் டெல்லி தலைமைக்கும் விரிவாக விளக்கியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் செயல்பாட்டாளர்களில் ஒருவர் கூறுகையில், "இது அவ்வளவு தான். உத்தவ் தாக்கரே எதிர்த்துப் போரிடும் எண்ணத்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. ஒருவேளை அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், எங்களால் அதிகம் செய்ய முடியாது. என்சிபிக்கும் இதே நிலைதான். அரசைக் காக்க சிவசேனா தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
கமல்நாத் விளக்கம்
இது குறித்து கமல்நாத் கூறுகையில், "எங்கள் எம்எல்ஏக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். காங்கிரசில் முழு ஒற்றுமை உள்ளது. ஆனால், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஏன் இன்னும் கவுகாத்தியில் இருக்கிறார்கள் என்பதுதான் எனது கேள்வி? முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். அவர்கள் கட்சியின் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு யாரை யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். இன்னும் ஏன் அவர்கள் கவுகாத்தியில் இருக்கிறார்கள்'' என்றார்.
என்ன பிரச்சினை
இருப்பினும், கமல் நாத்தைப் போல அனைத்து தலைவர்களும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது நம்பிக்கையுடன் இல்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஒரே இடத்தில் வைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மகாராஷ்டிர காங்கிரஸ் பொறுப்பாளர் எச்.கே.பாட்டீலிடம் மூத்த நிர்வாகி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்கள் கவலைப்படக் காரணம் இல்லாமல் இல்லை.
டெல்லி தலைமை
ஏனென்றால் சமீபத்தில் நடந்த மேலவை தேர்தலில் தான் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்து இருந்தனர். இதன் காரணமாகவே உடனடியாக அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் விரும்புகிறது. இருப்பினும், வழக்கம் போல இந்த விவகாரத்திலும் டெல்லி காங்கிரஸ் தலைமை மவுனம் காத்தே வருவதாகப் புலம்புகின்றனர் கட்சி நிர்வாகிகள்!