தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதி உதவிக்கான பதிவு மார்ச் வரை செல்லுபடியாகும்: மத்திய அரசு
டெல்லி: தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்காக பெற்றிருந்த பதிவு (Foreign Contribution Regulation Act FCRA- registration) மார்ச் மாதம் வரை செல்லுபடியாகும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர், ராமேஸ்வரம் கடற்கரைக்கு செல்ல 3 நாட்களுக்குத் தடை - சாமி தரிசனம் செய்ய அனுமதி
அன்னை தெரசா உருவாக்கிய மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி, வெளிநாட்டு நிதி உதவி பெற பதிவு செய்திருந்த விண்ணப்பம் அண்மையில் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகளே முடக்கப்பட்டதாக பரபரப்பு எழுந்தது.
மிஷனரிஸ் விளக்கம்
இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி, தங்களது வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கவில்லை என கூறியிருந்தது. மேலும் வெளிநாட்டு நிதி உதவிக்கான பதிவு விவகாரம் முடியும் வரை வங்கி கணக்குகளை நிறுத்தி வைக்கவும் தாங்களே அறிவுறுத்தி இருந்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
உள்துறை அமைச்சகம் விளக்கம்
மத்திய உள்துறை அமைச்சகமும் இந்த விவகாரத்தில் விளக்கம் கொடுத்தது. அதில், வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் 2010 மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை விதிகள் 2011-ன் கீழ் உள்ள தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாததற்காக மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழான புதுப்பித்தல் விண்ணப்பம் டிசம்பர் 25, 2021 அன்று நிராகரிக்கப்பட்டது. இந்தப் புதுப்பித்தல் மறுப்பை மறு ஆய்வு செய்ய மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி இடமிருந்து கோரிக்கை அல்லது சீராய்வு விண்ணப்பம் எதுவும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எதுவரை செல்லும்?
மேலும் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் பதிவு எண் 147120001-ல் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி பதிவு செய்யப்பட்டது, அக்டோபர் 31, 2021 வரை அதன் பதிவு செல்லத்தக்கதாக இருந்தது. பின்னர், புதுப்பித்தல் விண்ணப்பம் நிலுவையில் உள்ள பிற வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டச் சங்கங்களுடன் சேர்த்து டிசம்பர் 31, 2021 வரை இதன் பதிவு நீட்டிக்கப்பட்டது எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான் இந்த பதிவு செல்லுபடியாகும் காலத்தை மார்ச் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் அவகாசம்
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிக்கையில், பொதுமக்களின் நலன் கருதி வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிவு சான்றிதழ்கள் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை செல்லுபடியானதாகும்என்று தெரிவித்துள்ளது.