ஆன்லைன் சூதாட்டங்களுக்கு சிக்கல்! விளம்பரங்களுக்கு ஆப்பு.! ஊடகங்களுக்கு பறந்த மத்திய அரசின் உத்தரவு!
டெல்லி : ஆன்லைன் சூதாட்டங்கள் சமூக சிக்கல்களையும் நிதி பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது எனவும், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ கூடாது என ஊடகங்களை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மி கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பண இழப்பு மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
அடங்க மறுக்கும் கொரோனா.. 4 மாதங்களில் முதல் முறை! இந்தியாவில் 3 சதவீதத்தை தாண்டிய பாசிட்டிவ் விகிதம்
குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிகர்கள் நடிக்க கூடாது எனவும் அந்த விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது எனவும் கோரிக்கை வலுத்து வந்தது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்க பலதரப்பினரும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தனர்.
ஆன்லைன் சூதாட்ட தடை
இந்நிலையில் இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்களை விளம்பரப்படுத்தும் விளம்பரங்களை வெளியிடவோ, ஒளிபரப்பவோ வேண்டாம் என தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. அதில்," பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் பதிவு சட்டம், 1867 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட செய்தித்தாள்கள், தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள், டிஜிட்டல் மீடியாவில் செய்தி மற்றும் நடப்பு விவகார உள்ளடக்கத்தை வெளியிடுபவர்களுக்கு ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் பற்றிய ஆலோசனை வெளியிடப்படுகிறது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
04.12.2020 அன்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ஆன்லைன் கேமிங்கின் விளம்பரங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை உள்ளடக்கிய இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் (ASCI) வழிகாட்டுதல்களை கடைபிடிக்க தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களுக்கு ஒரு ஆலோசனையை வழங்கியது. ஆனால் தற்போது அச்சு, மின்னணு, சமூக மற்றும் ஆன்லைன் ஊடகங்களில் ஆன்லைன் பந்தய இணையதளங்கள், தளங்களின் பல விளம்பரங்கள் வெளிவருவது அமைச்சகத்தின் கவனத்திற்கு இப்போது வந்துள்ளது.
சூதாட்ட விளம்பரங்கள்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பந்தயம் மற்றும் சூதாட்டம் சட்டவிரோதமானது. மேலும் ஆன்லைன் பந்தயத்தின் விளம்பரங்கள் பெரும்பாலும் தடைசெய்யப்பட்ட ஒரு செயலை ஊக்குவிப்பதாகவும், நுகர்வோர், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க நிதி மற்றும் சமூக-பொருளாதார ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆன்லைன் சூதாட்டத்தின் விளம்பரங்கள் தவறாக வழிநடத்தும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019, கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்குகள் ஒழுங்குமுறை சட்டம் மற்றும் விளம்பர விதிமுறைகளுடன் கண்டிப்பாக இணக்கமாக இருப்பதாகத் தெரியவில்லை.
திடீர் கட்டுப்பாடு
பிரஸ் கவுன்சில் சட்டம், 1978 இன் கீழ் இந்திய பிரஸ் கவுன்சில், தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021இல் இது குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றின் படி மக்கள் மற்றும் பொது நலன்களைக் கருத்தில் கொண்டு, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் உட்பட ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்கள் இந்தியாவில் இதுபோன்ற விளம்பரங்களைக் காட்டவோ அல்லது அத்தகைய விளம்பரங்களை இந்திய மக்களை குறிவைக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது." என கூறப்பட்டுள்ளது.