முல்லை பெரியாறு மேற்பார்வை குழுவை ஓராண்டு நீட்டிக்க வேண்டும்! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
டெல்லி: முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழுவை ஓராண்டுக்கு நீடிக்க வேண்டும் என்றும், அதற்குள் புதிய அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் முழுமையாக செயல்படும்'' என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பாக கேரளாவும், தமிழகமும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. 126 ஆண்டுகள் பழமையான இந்த அணையானது பாதுகாப்பற்றது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கேரளா கூறுகிறது.
மேலும் புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா வலியுறுத்துகிறது. ஆனால் கேரளாவின் குற்றச்சாட்டை தமிழகம் முற்றிலும் மறுக்கிறது. அணை நன்றாக பராமரிக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது. இதனால் அணை நீர்மட்டத்தை 152 அடியாக கூட அதிகரிக்கலாம் என கூறுகிறது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இதனால் தமிழ்நாடு, கேரளா இடையே முல்லை பெரியாறு அணை தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சனை உள்ளது. இருமாநிலங்களும் சட்ட போராட்டத்தை முன்னெடுத்தன. முல்லை பெரியாறு அணை தொடர்பான பிரச்சனைகள் குறித்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசுக்கு கேள்வி
இந்நிலையில் முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதா?, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் என்ன? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் ஆணையங்கள் என்னென்ன அதிகாரங்களுடன் செயல்படும் என எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்பார்வை குழு
இந்நிலையில் மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா ஆஜராகி விபரங்களை எழுத்து பூர்வமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ‛‛தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் விரைவில் முழுமையாக செயல்படும். இதனால் ஓராண்டு வரை ஏற்கனவே உள்ள ஆணையின்படி முல்லை பெரியாறு அணையின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழு அதன் செயல்பாட்டைத் தொடர வேண்டும்.

தலைமை செயலாளர்களின் பங்கு
அணையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த மேற்பார்வை குழுவின் முடிவுகளை இரு மாநிலங்களும் முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு மற்றும் கேரள தலைமைச் செயலாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். மேலும் இரு மாநிலங்களின் தொழில்நுட்ப பிரச்சனைகளை தீர்க்க மேற்பார்வை குழுவால் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்க தொழில்நுட்ப வல்லுநர்களை உறுப்பினர்களாக நியமிக்குமாறு மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கு அறிவுரை வழங்கப்படும். இது கூட்ட முடிவுகள், நடவடிக்கைகளின் பொறுப்புணர்வை உறுதி செய்யும்'' என கூறப்பட்டு இருந்தது.

நாளைக்குள் பதில்
இதையடுத்து மத்திய அரசின் எழுத்து பூர்வ தாக்கலுக்கு கேரளா, தமிழக அரசுகள் நாளைக்கு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications