யங் இந்தியா ஆபீசுக்கு சீல்.. சோனியா காந்தி வீட்டில் போலீஸ் குவிப்பு.. அடுத்தடுத்த பரபரப்பில் டெல்லி
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் உட்பட பலர் அமலாக்கத்துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் 'யங் இந்தியா' பத்திரிகை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இதனையடுத்து சோனியா காந்தி இல்லத்தின் வெளியே போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராகுல் காந்தி உட்பட கட்சியின் முக்கிய புள்ளிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில் தற்போது யங் இந்தியா அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக திசை திருப்பப்படுவதாக காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில் இந்த சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.
சோனியா, ராகுலுக்கு சொந்தமான டெல்லி நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஆபீசுக்கு அமலாக்கத்துறை அதிரடி சீல்!
சீல்
நேஷனல் ஹெரால்டு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய புள்ளிகளிடம் தொடர் விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பல இடங்களில் அதிகாரிகள் நேற்றும் இன்றும் சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் யாரும் இல்லாததால் அதிகாரிகள் 'யங் இந்தியா' அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு
இந்த சம்பவம் தொடர்பாக கட்சியின் முக்கிய தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சோதனையின் போது உடன் இருக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு இருப்பதாக முன்வந்தால் மட்டுமே சீல் அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி ஜன்பத் ரோட்டில் அமைந்துள்ள சோனியாவின் வீடு மற்றும் காங்கிரஸ் தலைமையகத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
பின்னணி
இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களான சல்மான் குர்ஷித், மல்லிகார்ஜுன் கார்கே, பவன் பன்சால், ப சிதம்பரம் உள்ளிட்டோர் அவசர கூட்டத்தை நடத்தியுள்ளனர். நேற்று தொடங்கிய இந்த சோதனை நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல்லி ஹெரால்டு ஹவுஸில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகங்களிலும் அமலாக்க இயக்குநரகம் சோதனையை நடத்தியது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. நாடு விடுதலைக்கு முன்னரே 'அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தை நேரு தொடங்கி சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்புடன் இந்த பத்திரிகையை நடத்தி வந்தார்.
வழக்கு
இப்பத்திரிகைக்கு காங்கிரஸ் கட்சி நிதி வழங்கியது. 2010-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. அதன் பங்குதாரர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. அப்போது அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கடன் வழங்கப்பட்டது. இக்கடனுக்கு மாற்றாக அந்நிறுவனப் பங்குகள் சோனியா, ராகுல் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக ஏற்கனவே வருமான வரி துறை வழக்குப் பதிவு செய்து அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.