9 மாநில தேர்தல்: ஒன்றையும் விடக்கூடாது-பிளான் போடும் பாஜக..செயற்குழு கூட்டத்தில் வகுத்த வியூகம் என்ன?
டெல்லி: பாஜகவின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஜேபி நட்டா, நடப்பு ஆண்டில் 9 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாகவும் அதில் ஒன்றைக் கூட விடாமல் அனைத்திலும் ஜெயிக்க வேண்டும் என்று கூறியதாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
குஜராத்தில் பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பாஜகவின் இரண்டு நாள் செயற்குழு கூட்டம் கூடியது.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமை வகித்தார். கூட்டத்தின் முதல் நாளில் அனைத்து மாநில செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல்! திமுக கடும் எதிர்ப்பு..டெல்லிக்கு பறந்த முதல்வர் ஸ்டாலினின் கடிதம்! என்னாச்சு?
9 மாநில சட்டசபை தேர்தல்
இந்த ஆண்டு 9 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் குறித்த ஆலோசனை உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவின் பதவி காலம் வருகிற 20-ந் தேதி முடிவடைகிறது. இது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. பாஜகவின் செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.
அமித்ஷா உள்பட முக்கிய தலைவர்கள்
முன்னதாக சாலை பேரணியாக வந்த பிரதமர் மோடிக்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் மோடிக்கு கட் அவுட்களை வைத்து வரவேற்பு அளித்தனர். பின்னர் பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் இந்த ஆண்டு 9 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
ரவிசங்கர் பிரசாத்
செயற்குழு கூட்டத்தில் எது குறித்து விவாதிக்கப்பட்டது என்பது குறித்து பாஜகவின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:- "2023 ஆம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டு என பாஜக தேசிய தலைவர் கூறினார். இந்த ஆண்டு நடைபெறும் 9 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என ஜேபி நட்டா கூறினார்.
இன்று 1.30 லட்சம் பூத்கள்
இதேபோல் பிரதமர் மோடி கூறுகையில், பூத்கள் மட்டத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும். எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறோம் என கண்டறிந்து அதை செய்ய வேண்டும். இதற்கு முன்பாக இதுபோன்ற 72 ஆயிரம் பூத்கள் அடையாளம் காணப்பட்டன. இன்று 1.30 லட்சம் பூத்கள் மட்டத்தில் வலுவடைந்து இருப்பதகாக தேசிய தலைவர் கூறியிருக்கிறார் என்று கூறினார்' இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
நாம் மாற்றியிருக்க வேண்டும்
இந்த தேசிய செயற்குழு கூட்டத்தில், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்கள் மற்றும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறினார். மேலும், இமாசல பிரதேசத்தில் அங்கு ஆட்சி மாறி மாறி அமையும் போக்கை நாம் மாற்றியிருக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டோம். கட்சியின் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்தும் ஜேபி நட்டா பேசினார்" என்றார்.
எந்தெந்த மாநிலங்களில் தேர்தல்
திரிபுரா, மேகலயா, நாகலாந்து, கர்நாடகா, சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 9 மாநிலங்களில் நடப்பு ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியும் திரிபுரா, மேகலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியும் நடைபெற்று வருகிறது.