மீண்டும் விவசாய சட்டமா.. வரவே வராது - உறுதியளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர்!
டெல்லி: ரத்து செய்யப்பட்ட விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டுவரும் எண்ணம் இல்லை என மத்திய வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாஜக அரசால் மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இது விவசாயிகளை பாதிக்கும் என்று, நாடு முழுவதும் எதிர்ப்பலை கிளம்பியது. பஞ்சாப் விவசாயிகள் இதை எதிர்த்து டெல்லியில் போராட்டத்தை தொடங்கினர்.
இதையடுத்து வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், இந்தியாவில் மீண்டும் விவசாய சட்டங்கள் கொண்டு வரப்படுமா என்று ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பப்பட்டது.
வெடிக்கும் ஹிஜாப் விவகாரம்: பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை..மெகா அஸ்திரத்தை கையிலெடுக்கும் பாஜக!
வேளாண் அமைச்சர்
எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ராஜ்யசபாவின் இன்று பதிலளித்தார். அப்போது, ''
ரத்து செய்யப்பட்ட மூன்று விவசாய சட்டங்களும் மீண்டும் கொண்டுவரும் திட்டம் இல்லை'' என தெரிவித்துள்ளார். அமைச்சர் உறுதியளித்திருப்பதையடுத்து மீண்டும் வேளாண் சட்டம் கொண்டுவரப்படாது என விவசாயிகள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
நரேந்திர சிங் தோமர்
''விவசாயத் திருத்தச் சட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம். சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஒரு பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், சிலருக்கு இது பிடிக்கவில்லை. இதனால் அரசு ஏமாற்றமடையவில்லை. படிதான் பின்வாங்கியுள்ளோம். ஆனால் விவசாயிகள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்பதால் கண்டிப்பாக மீண்டும் முன்னோக்கிச் செல்வோம்'' என்று வேளாண் துறை அமைச்சர் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தெரிவித்திருந்தார். இதனால் மீண்டும் விவசாய சட்டம் வருமா என்று விவசாயிகள் நினைத்திருந்தநிலையில், வேளாண் சட்டம் வராது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள்
கடந்த 2019ம் ஆண்டு மத்திய மூன்று வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என, வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஓராண்டு காலம் நீடித்தது. இதில் 700க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்தனர். மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பிய நிலையில், வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
பட்ஜெட்
விவசாயிகள் நலனுக்காகவும், வேளாண்மைக்காவும் தமிழக அரசு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ததைத்போன்று மத்திய அரசும் வேளாண் பட்ஜெட் தனியாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி. டிஆர்பாலு நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார். விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் அறிமுகப்படுத்தும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை. ஆனால், நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்துக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.