இந்தியா கோரிக்கை விடுத்தும்.. சுமி நகரில் மாணவர்களுக்கு பாதுகாப்பு வசதி தரவில்லை: ஐ.நா.வுக்கான தூதர்
டெல்லி: ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்காகி வரும் உக்ரைனில் உள்ள சுமி நகரில் சிக்கி இருக்கும் இந்திய மாணவர்கள் தங்க எந்த பாதுகாப்பான இடமும் ஒதுக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பாக நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருமூர்த்தி, தாக்குதல் நடைபெற்று வரும் இடங்களில் இருந்து வெளிநாட்டினர் மற்றும் உக்ரைன் மக்கள் தப்பிச்செல்ல பாதுகாப்பான வழிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினார்.

போரை நிறுத்திவிட்டு சுமூகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இரு நாடுகளையும் இந்தியா வலியுறுத்தி வரும் வேளையில், உக்ரைனின் சுமி நகரிலுள்ள உள்ள இந்திய மாணவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை ஏற்படுத்தித் தராதது கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
போர் நடைபெறும் பகுதிகளில் மனிதாபிமான உதவிகளை பாரபட்சம் இன்றி நடுநிலையோடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்ட திருமூர்த்தி, பாதிக்கப்பட்ட மக்களை சுதந்திரமாக வழிநடத்த வேண்டும் என்றார்.
உக்ரைனில் சிக்கித் தவித்த 20,000 இந்திய மாணவர்களை தாய்நாட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக தெரிவித்த அவர், பிற நாட்டு குடிமக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறுவதற்கும் இந்தியா உதவி புரிந்ததை சுட்டிக் காட்டினார். போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளுக்கு தேவையான மருந்துகள், கூடாரங்கள், தண்ணீர் சேமிப்பு டேங்குகள் போன்ற பல்வேறு நிவாரண பொருட்களை இந்தியா வழங்கி வருகிறது. தற்போதைய சூழலில் உக்ரைனுக்கு எந்த மாதிரியான உதவிகள் தேவை என்பதை கண்டறிந்து செய்து வருகிறோம். இந்தியாவின் மனிதாபிமான உதவிகள் தொடரும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இருநாடுகளும் அனைத்து விதமான பகை உணர்வுகளையும் கைவிட்டு அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி போரை கைவிடுமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறிய திருமூர்த்தி, சில மணி நேரங்களுக்கு முன்பாககூட பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் மற்றும் ரஷியா தலைவர்களுடன் பேசி அமைதிக்கு திரும்ப வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
Recommended Video
பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசிய உக்ரைன் அதிபர் வொலொடிமிர் செலென்ஸ்கி மற்றும் ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் உக்ரைனின் சுமி நகரில் சிக்கி இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications