லடாக்கில் சீனா ஊடுருவல்? ராஜ்யசபாவில் கேள்வி எழுப்ப பாஜகவின் எம்.பி. சு.சுவாமிக்கு அனுமதி மறுப்பு!
டெல்லி: லடாக்கில் சீனாவின் ஊடுருவல் தொடர்பாக ராஜ்யசபாவில் தாம் கேள்வி எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
லடாக் எல்லைப் பகுதியில் சீனாவின் தொடர்ச்சியாக ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் ஊடுருவ முயற்சித்தனர். அதை நமது ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்தனர். சீனா தரப்பில் 35 பேர் கொல்லப்பட்டனர். 1967-ம் ஆண்டு இந்தியா- சீனா யுத்தத்துக்குப் பின்பு இருநாடுகளிடையே மிகப் பெரிய பதற்றத்தை இந்த ஊடுருவல் சம்பவம் ஏற்படுத்தியது.

பேச்சுவார்த்தை தோல்வி
இதனைத் தொடர்ந்து சீனாவுடன் இதுவரை பல முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சு.சுவாமி விமர்சனம்
அண்மையில் பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பியான சுப்பிரமணியன் சுவாமியும் லடாக் விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், லடாக் தொடர்பான பாதுகாப்பு கொள்கையில் மோடி அரசு இமாலய தோல்வி அடைந்துவிட்டது. நாட்டின் வெளியுறவு கொள்கை, பாதுகாப்பு கொள்கையும் தோற்றுவிட்டது என விமர்சித்திருந்தார்.
Recommended Video

ராஜ்யசபாவில் கேள்வி எழுப்ப அனுமதி மறுப்பு
இந்நிலையில் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், லடாக்கில் சீனா ஊடுருவல் குறித்து ராஜ்யசபாவில் கேள்வி எழுப்ப தமக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தமக்கு தெரிவிக்கப்பட்டிருப்பது வேடிக்கையானது எனவும் குறிப்பிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி உள்ளது.

பாஜகவுக்கு விரைவில் முழுக்கு?
மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்ததால் பாஜகவின் தேசிய செயற்குழுவில் இருந்து சுப்பிரமணியன் சுவாமி விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அண்மையில் டெல்லியில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது மமதா பானர்ஜியை மொரார்ஜி தேசாய், சரண்சிங் உள்ளிட்ட தலைவர்களுடன் ஒப்பிட்டு புகழ்ந்து கூறினார் சுப்பிரமணியன் சுவாமி. இதேபோல் டெல்லியில் தற்போது முகாமிட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவையும் சந்தித்து பேசினார் சுப்பிரமணியன் சுவாமி. இதனால் பாஜகவில் இருந்து சு.சுவாமி விலகுவார் என கூறப்படுகிற நிலையில் மத்திய அரசை மீண்டும் விமர்சித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications