பிரதமர் மோடியை சந்தித்த தம்பிதுரை.. உற்றுக் கவனித்த ஓபிஎஸ்.. டெல்லிக்கு 3 ‘கீ’! என்னமோ நடக்குதே?
டெல்லி : ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியதற்கு, தம்பிதுரை - பிரதமர் மோடி சந்திப்பு தான் காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பிரதமர் நரேந்திர மோடியை அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை நேற்று நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றதற்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசியல் நிலவரம், அதிமுக விவகாரம் பற்றி அவர்கள் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக டெல்லியில் ஒரு முக்கியமான மூவை செய்த தம்பிதுரை, நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியதை ஓபிஎஸ் தரப்பு உன்னிப்பாக கவனித்துள்ளது.
இதையடுத்தே, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதினார் ஓபிஎஸ் என்கிறார்கள்.
கமுக்கமா வச்சிருந்து கடைசி நேரத்துல.. ஓஹோ.. அவர் பார்த்த வேலை தானா? ஓபிஎஸ்ஸை திணறவைத்த 'டாப்' லீடர்!
ஓபிஎஸ் அணி அப்செட்
அதிமுக விவகாரத்தில் பாஜக தலைமையின் ஆதரவு தனக்குத்தான் இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் நம்பி வந்த நிலையில் பாஜக தலைமையின் திடீர் கடிதத்தால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடுமையாக அப்செட் ஆனார்கள். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஜி 20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது ஓபிஎஸ் தரப்பை நிலைகுலையச் செய்தது.
ஓபிஎஸ் லெட்டர்
இந்நிலையில், டெல்லி புள்ளிகளுக்கு தொடர்பு கொண்டு விசாரித்ததில், எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அதிமுக மூத்த எம்.பி தம்பிதுரையே இந்த குழப்பத்திற்குக் காரணம் என தெரியவந்தது. அவர் மூலமாகவே எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து, தனக்கு நெருக்கமான பாஜக புள்ளிகளுடன் ஆலோசித்த ஓபிஎஸ், நான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒரு சிறு குழு தான், அதிகாரப்பூர்வமான தகவல்களை எனக்கே தெரிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
கடந்த சில வாரங்களாக, குஜராத், இமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தல் பணிகளால் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிஸியாக இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் முடிவுகள் வெளியானதில் இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியைப் பறிகொடுத்திருந்தாலும், குஜராத்தில் அமோக வெற்றியைப் பெற்றது பாஜக. இதையடுத்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும், குஜராத் வெற்றிக்காக பாஜகவிற்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
பிரதமரை சந்தித்த தம்பிதுரை
இந்நிலையில் தான் நேற்று, பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக எம்.பி தம்பிதுரை நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், தமிழக அரசியல் நிலவரம், அதிமுக விவகாரம் பற்றி அவர்கள் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தம்பிதுரை, பிரதமர் மோடியைச் சந்தித்ததை தங்களுக்கு நெருக்கமான டெல்லி புள்ளிகள் மூலம் உன்னிப்பாக கவனித்துள்ளார் ஓபிஎஸ்.
ஈபிஎஸ் சார்பாக
பிரதமர் மோடியைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்த தம்பிதுரை, அதிமுக விவகாரம் பற்றிப் பேசியதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என மத்திய அரசு குறிப்பிட்டதில் வேலையைக் காட்டிய தம்பிதுரையின் இந்தச் சந்திப்பு ஓபிஎஸ் தரப்புக்கு புளியைக் கரைத்துள்ளது. ஓபிஎஸ் டெல்லி செல்ல திட்டமிட்டு வரும் நிலையில், தம்பிதுரையின் சந்திப்பால் பாஜக தலைமை நம்மை புறக்கணித்து விடுமோ என டென்ஷன் ஆனார்.
கவனத்தைத் திருப்ப
இதையடுத்து, டெல்லியின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கும் விதமாக ஒரு வேலையைச் செய்தார் ஓபிஎஸ். குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோருக்கு தனித்தனியே கடிதம் எழுதியுள்ள முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக வெளிப்படுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எனக் குறிப்பிட்டே அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் ஓபிஎஸ்.
ஒன்றிணைந்து பணியாற்ற விரும்புகிறேன்
பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் அனுப்பிய கடிதத்தில், குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய வரலாற்று சாதனை புரிந்து, 150க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியமைக்காக எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் தருணத்தில் தனது நீடிக்கும் உறவு, கட்சியின் ஆதரவு ஆகியவை தொடரும் என உறுதியளிக்க விரும்புகிறேன். இரு கட்சிகளுக்கிடையே உள்ள நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்வது மட்டுமின்றி, மக்கள் நலன் சார்ந்த அனைத்து முயற்சிகளுக்கும் ஒன்றிணைந்து பணியாற்றிட விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
நட்டா, அமித்ஷாவுக்கு
இதேபோல உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோருக்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,"1985-ல் 149 இடங்கள் என்ற முந்தைய சாதனையை முறியடித்து, ஏழாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்து குஜராத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதற்கு வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார். நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில் குஜராத்தின் தேர்தல் முடிவுகள், உண்மையும், திறமையும் வாய்ந்த நிர்வாகத்தை மக்கள் மதிக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கீ கொடுத்த ஓபிஎஸ்
பாஜக தலைமை ஓபிஎஸ்ஸை கைவிட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறி வரும் நிலையில், ஓபிஎஸ் பாஜகவுடன் இணைய விரும்புதாக கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இந்த வாழ்த்துக் கடிதங்களின் மூலம், டெல்லியின் கவனத்தை தன் பக்கம் திருப்ப ஓபிஎஸ் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஓபிஎஸ், அதற்கான ஒரு சாவியாகவே இந்த கடிதத்தை அனுப்பி இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.