3 நாளுக்கு மேல் காய்ச்சலா? டாக்டரை பார்த்தேயாகனும்! ஓமிக்ரான்னு மெத்தனம் கூடாது! நிபுணர் எச்சரிக்கை
டெல்லி: ஓமிக்ரானால்தான் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை எப்படி அறியலாம் என்பதையும் அதற்கான அறிகுறிகள் அடங்கிய பட்டியலையும் நுரையீரல் துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்றைய நிலவரப்படி 4 ஆயிரத்திற்கு மேல் பாதிப்பு சென்றுள்ளது. இந்த வேரியண்ட் தீவிரமடைந்ததால் இந்தியாவில் 3ஆவது அலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வேரியண்ட் மற்ற வகை கொரோனாவில் இருந்து வேறுபட்டவை என்பதால் நாம் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுவிட்டோம் என்பதை எப்படி அறிவது என்ற சந்தேகங்களை விளக்குகிறார் மாசினா மருத்துவமனையின் நுரையீரல் துறை ஆலோசகர் டாக்டர் சோனம் சோலங்கி.

ஓமிக்ரான் கேஸ்கள்
இதுகுறித்து அவர் கூறுகையில் பொதுவாக ஓமிக்ரான் அறிகுறிகள் உடல் வலியிலிருந்து தொடங்கும். பின்னர் சோர்வு, தலைவலி, காய்ச்சல் ஆகியவை ஆரம்ப நாட்கள் இருக்கும். பின்னர் இருமல் ஏற்படும். மூக்கு ஒழுகுதல், தும்மல் போன்றவை ஏற்படும். வறட்டு இருமல் சில நாட்களுக்கு இருக்கும். பொதுவாக 80 சதவீத நோயாளிகளுக்கு முதல் 3 நாட்களில் காய்ச்சல் குணமாகிவிடுகிறது.

ஓமிக்ரான் அறிகுறி
ஒருவேளை 3 நாட்களுக்குள் குணமாகாவிட்டால் தொற்று தீவிரமடைந்துவிட்டது என அர்த்தம். எனவே அதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சரியான நேரத்தில் தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரவல் குடும்ப உறுப்பினர்களுக்கு பரவாமல் தடுக்க வேண்டும். உங்களுக்கு அறிகுறிகள் இருந்தாலும் வெளியே சென்றால் என் 95 மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். மற்ற வேரியண்ட்களை காட்டிலும் ஓமிக்ரான் மிகவும் அதி வேகமாக பரவக் கூடியது என்பது நமக்கு தெரியும்.

என் 95 மாஸ்க்
அதனால்தான் பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும். உங்களுக்கு கொரோனா அறிகுறிகளோ காய்ச்சலோ இருந்தால் துணி மாஸ்க்கோ சர்ஜிக்கல் மாஸ்கோ போதுமானது அல்ல. எனவே அறிகுறிகள் இருப்பவர்கள் என் 95 மாஸ்க் பயன்படுத்துங்கள் என்றார். இனி அடுத்து வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என வேறு ஒரு மருத்துவ நிபுணரும் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கொரோனா பரவல்
ஓமிக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில் அது இந்த மாத இறுதியில் தீவிரமடையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் இந்தியாவில் கொரோனா கேஸ்களின் தினசரி எண்ணிக்கை 7 லட்சமாக உயர வாய்ப்பிருப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications