ஒரே நாளில் பறிபோன 1290 உயிர்கள்.. உச்சபட்சமாக 97,897 கேஸ்கள்.. இந்தியாவில் கொரோனாவுக்கு ஓராண்டு
டெல்லி: கொடுமையான கொரோனா இந்தியாவில் நுழைந்து ஜனவரி 30ஆம் தேதியான இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில் நாம் எத்தனையோ இன்னல்களையும் சவால்களையும் சந்தித்து, பலரது தியாகத்தாலும் மக்களின் ஒத்துழைப்பாலும் மீண்டு வருகிறோம்.
ஓராண்டுக்கு முன்பு இந்தியாவில் நிலைமை எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது என்பதற்கு சில புள்ளிவிவரங்கள் சான்றாக மாறி நிற்கின்றன.
சீனாவில் அவ்வப்போது தோன்றக் கூடிய ஒரு வைரஸ் என்று தான் கொரோனா நோய் தொடங்கிய காலத்தில் இந்திய மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு லேசாக பயம் தொற்றிக்கொண்டது.
இதன் பிறகு, டெல்லி, ஹைதராபாத், கர்நாடகா, தமிழ்நாடு என பல மாநிலங்களிலும் குறுகிய காலத்தில் வைரஸ் தொற்று பரவியது. இதன் காரணமாக மார்ச் மாதம் கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது மத்திய அரசு.
ஊரடங்கு உத்தரவு
பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து போயின. ஊரடங்கு உத்தரவுக்கு நடுவேயும் கொரோனா பரவல் அதன் வேலையை காட்டிக் கொண்டுதான் இருந்தது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தெரிந்தவர்கள் யாராவது ஒருவராவது கொரோனா நோய் பாதிக்கப்பட்டு பெரும் இன்னல்களை சந்தித்தனர். அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள்.
கேரளாவில் முதல் கேஸ்
இது வருடா வருடம் சீனாவில் வந்து செல்லும் ஏதோ ஒரு வைரஸ் கிடையாது. கொரோனா உலகம் முழுவதையும் ஆட்டிப் படைக்கக் கூடிய வைரஸ் என்பதும் இந்தியா போன்ற தட்ப வெப்ப நாடுகளில் இது பரவாது என்று நினைத்தவர்களின் நினைப்பையும் முழுக்க புரட்டிப்போட்டது.
ஜனவரி 20ம் தேதி சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கேரளாவின் திருச்சூர் மாவட்டத்துக்கு வந்த 20 வயது மாணவருக்கு முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
முதல் பலி சம்பவம்
மார்ச் மாதம் 2ம் தேதி கேரளா வெளியே முதல் முறையாக கொரோனா பாதிப்பு பதிவானது. அன்றைய தினம், டெல்லியில் ஒருவர், ஹைதராபாத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். மார்ச் 12ம் தேதி கர்நாடக மாநிலம் கல்புர்கி நகர மருத்துவமனையில் 76 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தியாவில், கொரோனாவுக்கு உயிரிழந்த முதல் நபர் இந்தியாவில் அவர்தான்.
அதிகபட்ச கேஸ்கள்
செப்டம்பர் 16ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 97 ஆயிரத்து 897 கொரோனா கேஸ்கள் பதிவாகின. செப்டம்பர் 15-ஆம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 1,290 பேர் பலியாகினர். மார்ச் 24 ஆம் தேதி முதல் முறையாக நாட்டில் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டது
செப்டம்பர் 17ஆம் தேதி ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை அதிகபட்சமாக 10 லட்சத்து 17 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. ஒருவழியாக, 2021ம் ஆண்டு விடிவுகாலம் பிறந்தது. ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது.