22 குழந்தைகளை தத்தெடுக்கும் ராகுல் காந்தி.. யார் இவர்கள்? பின்னணி இதுதான்
டெல்லி: ஏப்ரல் 22ம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில் பெற்றோரை இழந்து தவிக்கும் 22 குழந்தைகளை லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸின் ராகுல் காந்தி தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு நம் நாட்டின் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. மே 7 ம் தேதி ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை நம் படை வீரர்கள் அழித்தனர்.

இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. நம் நாடும், பாகிஸ்தானும் மாறி மாறி தாக்குதல் நடத்தினர். நம் நாட்டின் துல்லிய தாக்குதல்கள் பாகிஸ்தானின் போர் விமானங்கள், ராணுவ தளம், விமானப்படை தளங்களை அழித்தது. மாறாக பாகிஸ்தானின் ஏவுகணை, ட்ரோன்கள் வானிலேயே அழிக்கப்பட்டது.
இருப்பினும் கூட எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி மூலம் குண்டுகளை குடியிருப்புகள் மீது வீசியது. இதில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் உள்பட சில மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. பொதுமக்களும் பலியாகினர். பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல இடங்களிலும் பொதுமக்கள் பலியாகினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இறந்தனர்.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் பெற்றோரை இழந்த 22க்கும் மேற்பட்ட குழந்தைகளை ராகுல் காந்தி தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோர் இழந்த 22 குழந்தைகளின் கல்விச்செலவை ராகுல் காந்தி ஏற்பார் என்று ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தைகள் தங்கள் படிப்பைத் தொடர ஏதுவாக, உதவித் தொகைக்கான முதல் தவணை நாளை வழங்கப்படும் என்றும், இந்தக் குழந்தைகள் பட்டப்படிப்பை முடிக்கும் வரை உதவி தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications