கடைசி 7 நாட்கள்.. ஸ்டாலின் முதல் அமித் ஷா வரை.. தீவிர ஆலோசனையில் கட்சிகள்.. தேர்தல் பிளான்!
லோக்சபா தேர்தல் முடிவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தீவிர கூட்டணி ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறது.
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தீவிர கூட்டணி ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து கட்சிகள் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறது.
லோக்சபா தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளது. 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. 7ம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் மே 19ம் தேதி நடக்க உள்ளது.
இந்த லோக்சபா தேர்தல் முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. பிரச்சாரமும் வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் தேர்தல் கூட்டணி தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறது.
சந்திரபாபு நாயுடு
எதிர்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைப்பது குறித்து முதன்முதலில் திட்டமிட்டது ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுதான். இவர் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து ஆலோசித்து வருகிறார். இதற்காக இவர் மே 21ம் தேதி எதிர்கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்த உள்ளார். அதற்கு முன் இந்த வாரம் மமதா பானர்ஜி உட்பட சில முக்கிய தலைவர்களை இவர் சந்திக்க போகிறார் என்கிறார்கள்.
சந்திரசேகர ராவ் எப்படி
ஆந்திர முதல்வர் போலவே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணியை உருவாக்க முயன்றார். ஆனால் அது இன்னும் கைகூடவில்லை. இதனால் இந்த வாரம் வரிசையாக 10க்கும் அதிகமான தலைவர்களை சந்திக்க சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார். மாயாவதி, அகிலேஷ் யாதவை சந்திக்கவும் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.
திமுக ஆலோசனை
லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து திமுக தரப்பு ஒரு பக்கம் சைலண்டாக ஆலோசனை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் மூன்றாவது கூட்டணி அமைத்தால் அதில் இணையலாமா, வேண்டாமா என்பது குறித்து திமுக ஆலோசித்து வருகிறது. மே 21ம் தேதி நடக்க உள்ள எதிர்க்கட்சி கூட்டணி ஆலோசனையில், தங்கள் கருத்தை வலுவாக பதிய வைக்க திமுக திட்டமிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி
பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி இந்த வாரம் எடுக்க போகும் முடிவுகள், தேசிய அரசியலை தீர்மானிக்க போகிறது. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பிரதமர் ஆசையில் உறுதியாக இருப்பாரா? இல்லை வேறு மாநில தலைவர்களுக்கு விட்டுக்கொடுப்பாரா, ராகுல் காந்திக்கு வழி விடுவாரா என்று இந்த வாரம் தெரிந்துவிடும். வரும் வியாழக்கிழமை இதுகுறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
காங்கிரஸ் என்ன செய்ய போகிறது
காங்கிரஸ் எதிர்க்கட்சி கூட்டணி குறித்து இன்னும் 7 நாட்களில் முடிவெடுக்க உள்ளது. பெரும்பாலும் மே 20ம் தேதி காங்கிரஸ் எதிர்க்கட்சி கூட்டணி குறித்து அறிவிக்கலாம் என்று கூறுகிறார்கள். முக்கியமாக மூன்றாவது கூட்டணி உருவாவதை காங்கிரஸ் தடுக்குமா, மாநில கட்சிகளை அரவணைத்து செல்லுமா என்று தெரிந்துவிடும். இந்த நிலையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று நடக்க உள்ளது.
பாஜக ஆலோசனை
அதேபோல் பாஜக முக்கிய மாநில தலைவர்களை சந்தித்த இந்த வாரம் ஆலோசனை நடத்த இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆகியோருடன் பாஜக முதற்கட்ட ஆலோசனைகளை நடத்த உள்ளது. ஆனால் இந்த ஆலோசனை பெரும்பாலும், ரகசியமாக நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மமதா பானர்ஜி
இந்த பேச்சுவார்த்தை எதிலும் கலந்து கொள்ளாமல் தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து மிக தீவிரமாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இருக்கிறார். அதிக இடங்களை வென்று பின் கூட்டணி குறித்த ஆலோசனைகளை நடத்தலாம் என்ற திட்டத்தில் இவர் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.