கபில்சிபல் வீடு மீது தாக்குதலுக்கு கண்டனம்- காங். அதிருப்தி அணியில் இணைந்த ப.சிதம்பரம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் 23 தலைவர்களை கொண்ட அதிருப்தி அணியில் முன்னாள் மத்திய அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரமும் இணைந்திருப்பது சோனியா காந்தி குடும்பத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் வீடு முன்பாக காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரசால் பெற முடியாமல் போனது.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். பின்னர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார்.
செத்தா கூட... கனவுல கூட... பாஜக பக்கம் தலையே வெச்சு படுக்கமாட்டேன்... அடித்து சொல்லும் கபில் சிபல்
காங்கிரஸில் பெரும் குழப்பம்
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. மேலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், கோவா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் பூதாகரமாகவும் வெடித்தது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசே கவிழ்ந்தும் போனது.
23 தலைவர்களின் அதிருப்தி அணி
இதனால் கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 தலைவர்கள் காங்கிரஸ் புதிய தலைவர் நியமனம் குறித்து கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பினர். சோனியா காந்தி தலைமைக்கு எதிராக 23 மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியது அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் கடுப்பாகிப் போன மேலிடம் இந்த 23 அதிருப்தி தலைவர்களை ஒதுக்குவதில் தீவிரம் காட்டியது.
பஞ்சாப் முதல்வர் ராஜினாமா
இந்நிலையில் பஞ்சாப் ஆளும் காங்கிரஸ் அரசு கடுமையான உட்கட்சி மோதலில் சிக்கியிருக்கிறது. முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அத்துடன் காங்கிரஸ் கட்சியில் விலகப் போவதாகவும் அறிவித்தார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் அமரீந்தர்சிங் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். அமரீந்தர்சிங் ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து சித்துவும் ராஜினாமா செய்ய குழப்பம் முற்றியது.
கபில் சிபலுக்கு எதிராக போராட்டம்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல், காங்கிரஸ் கட்சிக்கு யார்தான் தலைவர்? யார்தான் முடிவெடுக்கிறார்கள்? கட்சியின் செயற்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும் என கொந்தளித்தார். உடனே டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகள், கபில் சிபல் வீட்டு முன்பாக போராட்டம் நடத்தினர். அவரது வீடு மீது அழுகிய தக்காளிகளை வீசினர். கபில் சிபல் கார் அடித்து நொறுக்கப்பட்டது. ஆனால் கபில் சிபலின் கோரிக்கையான காங்கிரஸ் செயற்குழுவைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு வலுத்து வருகிறது.
அதிருப்தி அணியில் ப.சிதம்பரம்
தற்போது அதிருப்தி அணியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரமும் இணைந்துள்ளார். கபில் சிபல் வீடு மீதான தாக்குதலைக் கண்டித்திருக்கும் ப.சிதம்பரம், செயற்குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்ற கருத்தையும் ஆதரித்து உரையாடல் அவசியம் என பதிவிட்டுள்ளார். அதிருப்தி அணியில் ப.சிதம்பரமும் இணைந்திருப்பது சோனியா காந்தி குடும்பத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இனியும் அதிருப்தி அணியின் குரலுக்கு மேலிடம் செவிசாய்க்காமல் போனால் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் எச்ச சொச்ச எதிர்காலமும் காணாமல் போகும் என்பதே அக்கட்சியினரின் கருத்து.