ப.சிதம்பரத்திற்கு 19ம் தேதிவரை நீதிமன்ற காவல்.. நீதிமன்றம் அதிரடி! திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் இருந்து வருகிறார். இந்த நிலையில் சிபிஐ காவலுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜாமீன் அல்லது வீட்டுக் காவல் கோரி சிதம்பரம் தரப்பு வாதிட்டது. அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதியோ கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுங்கள் என அறிவுறுத்தினார். இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

செப்.5 வரை காவல்
அவரை ஒரு நாள் சிபிஐ காவலில் இருக்குமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கு அடுத்த நாள் மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரத்தை செப்டம்பர் 5-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

ஜாமீன் கொடுக்கக் கூடாது
இந்த நிலையில் இன்றுடன் சிதம்பரத்தின் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் அவர் 6-ஆவது முறையாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தன் தரப்பு வாதத்தை தொடங்கியது. அதில் சிபிஐ தரப்போ, சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது. அவருக்கு ஜாமீன் கொடுத்தால் வழக்கின் போக்கை சிதைத்துவிடுவார்.

நீதிமன்றக் காவல்
எனவே அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அனுப்புங்கள். வழக்கு தொடர்பான தகவல்கள் சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ளன என்று சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார். ஆனால் ப.சிதம்பரம் தரப்போ அவரை விடுவிக்கக் கோரி வாதம் செய்தது.

திகார் சிறை
இந்த நிலையில் ப.சிதம்பரத்தை நீதிமன்றத்துக்கு அனுப்ப கோரும் சிபிஐ மனு மீது அரை மணிநேரத்தில் உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி ஷைனி தெரிவித்தார். இதையடுத்து அரை மணி நேரம் கழித்து மீண்டும் நீதிமன்றம் கூடியது. அப்போது நீதிபதி ஷைனி, ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தனி அறையில்
மேலும் இவர் 19-ஆம் தேதி வரை சிறையில் இருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டாம் என ப.சிதம்பரத்தின் கோரிக்கையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள் நிதி அமைச்சரான ப சிதம்பரத்தை தனி அறையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு தேவையான பாதுகாப்பு, மருந்துகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications