மோடியின் பிரச்சாரம் ஜனநாயகத்தின் அடிப்படையையே வலுவிழக்க செய்கிறது.. ப. சிதம்பரம் வார்னிங்
டெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். பரப்புரையில், "பாஜக சார்பில் நிற்கும் வேட்பாளர் குறித்து கவலைப்படாமல் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இதனை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. ஏற்கெனவே ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் குடியரசுத் தலைவர் ஆட்சி முறை வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் இவ்வாறு கூறியிருப்பது இந்த கருத்துக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

தேர்தல்
எதிர் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டப்பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வரும் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் நடாளுமன்ற தேர்தலை பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில் பாஜக இந்த சட்டப் பேரவை தேர்தலில் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியிருந்தார்.

தாமரை
அப்போது அவர் பேசியதாவது, "மக்கள் வேட்பாளர்களை பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தாமரை சின்னத்தை பார்த்தவுடன் வாக்களித்தால் போதுமானது. நான் தாமரை சின்னம் சார்பாக இங்கு வந்துள்ளேன். பாஜக மத்தியில் இருந்தால் மட்டும் போதுமா? மாநிலத்திலும் இருக்க வேண்டாமா? எனவே தாமரைக்கு நீங்கள் செலுத்தும் வாக்கு நேரடியாக எனக்கு வாக்களிப்பதை போன்றதாகும். இந்த வாக்குகள் எனது கணக்கில் வந்து சேரும்" என்று பேசியிருந்தார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ப.சிதம்பரம்
இது குறித்து சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில், "தேர்தலில் வேட்பாளரின் பெயரை பார்க்காதீர்கள். தாமரை சின்னத்தை மட்டும் பாருங்கள். தாமரைக்கு அளிக்கும் வாக்கு என்பது மோடிக்கு அளிக்கும் வாக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி இம்மாச்சலில் பேசியுள்ளார். நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்காத செய்தியாளர்களை சந்திக்காத பிரதமர் மோடி தற்போது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையையே வலுவிழக்க செய்து வருகிறார்.

காங்கிரஸ்
ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் தலைவர்களும் நீண்ட காலமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று முயன்று வருவதை நாம் அறிவோம். இந்த ஆட்சி வடிவம் நாட்டில் 'பெரும்பான்மைவாதத்தை' நிலைநிறுத்தும். பன்மைத்துவத்தை கொன்று விடும்" என்று கூறியுள்ளார். ஏற்கெனவே இதேபோன்ற குற்றச்சாட்டை இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளும் பாஜக அரசு மீது வைத்து வருகின்றன. இந்நிலையில் சிதம்பரம் கூறியுள்ள கருத்து அனைவரின் கவனத்தை பெற்றிருக்கிறது.

சிபிஎம்
இதேபோல சமீபத்தில் பாஜக குறித்து விமர்சித்திருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் ஆட்சி முறையை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு கடுமையாக முயன்று வருகிறது. மாநில அரசின் நலன்களை சீரழித்து இதற்கான அடித்தளத்தை ஆர்எஸ்எஸ் உருவாக்கி வருகிறது. இவ்வாறு குடியரசுத் தலைவர் ஆட்சிமுறை உருவாக்கப்படும் எனில், கூட்டாட்சி தத்துவம் முற்றிலும் அழிக்கப்படும். முடிவுகள் மத்திய அரசிடமிருந்து திணிக்கப்படும். எனவே இதனை உருவாக்க நினைப்பவர்களை ஆட்சியிலிருந்து தூக்கி எறிய வேண்டும். இதுவே சிபிஎம் கட்சியின் நிலைப்பாடு" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications