லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்ட மின்சார சட்ட திருத்தம்.. நாடளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி வைப்பு
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 16வது நாள் அமர்வில் இன்று இரண்டு அவையிலும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமளி ஏற்பட்டது. அமளிக்கு இடையில் இன்று லோக்சபாவில் மின்சார சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது,
கடந்த ஜூலை 18 தேதி தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்க உள்ளது. நாடாளுமன்ற கூட்ட தொடருக்கு முன்பாக இரண்டு முறை இது பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
மொத்தம் 32 மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் 14 மசோதாக்கள் முழு வடிவம் பெற்றுள்ளன. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் விலை, விலைவாசி உயர்வு, அக்னபாத் திட்டம், நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு மூலம் சுரங்கங்கள் மற்றும் மினரல்கள் தொடர்பான மசோதா உள்ளிட்ட பல முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. மேலும் பல மாநில கூட்டுறவு சொசைட்டி மசோதா, கண்டோன்மெண்ட் மசோதா, தமிழ்நாடு, சட்டீஸ்கரில் எஸ்,சி, எஸ்.டி லிஸ்டை மாற்றும் மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
இன்று கூட்டத்தொடரில் இரண்டு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடுமையாக அமளி செய்தனர். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர் விலைவாசி உயர்விற்கு எதிராக அவைக்கு உள்ளே போராட்டம் செய்தனர். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை, ஜிஎஸ்டி பிரச்சனை உள்ளிட்ட பல விஷயங்களை எதிர்த்து போராட்டம் செய்தனர்.
மத்திய அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி எதிர்க்கட்சிகள் இன்று லோக்சபா, ராஜ்ய சபா இரண்டிலும் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டது. அமளிக்கு இடையில் இன்று அமளிக்கு இடையில் இன்று லோக்சபாவில் மின்சார சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தம் காரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும், 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும், மின் விநியோகம் தனியார் வசம் செல்லும், அதை மத்திய அரசு மறைமுகமாக கட்டுப்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
முக்கியமாக இந்த மசோதாவிற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்னொரு பக்கம் ராஜ்ய சபாவில் இன்று சபாநாயகர் வெங்கையா நாயுடுவுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.
வரும் 10 தேதியுடன் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஓய்வு பெற உள்ள நிலையில், மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டினார் . நமது குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடு இந்த அவையிலிருந்து விடை பெறுகிறார். அவருக்கு நன்றி தெரிவிக்க இங்கு வந்துள்ளோம். இந்த அவைக்கு இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்த அவையின் வரலாற்று தருணங்கள் அவரது அழகான இருப்புடன் தொடர்புடையவை" என பிரதமர் நெகிழ்ச்சியடைந்தார்.
இதில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, "கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அழுத்தமான தருணங்களில் நீங்கள் சிறப்பாக பணியாற்றினீர்கள் அதற்காக நன்றி கூறுகிறேன்" என வெங்கையா நாயுடுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் நீங்கள் விட்டுச்சென்ற பணியை அரசு முன்னெடுத்து சென்று முடிக்கும் என்றும் கார்கே நம்பிக்கை தெரிவித்து வெங்கையா நாயுடுவுக்கு விடையளித்துள்ளார்.
இவர்கள் எல்லோருக்கும் அவையில் கண்ணீருடன் வெங்கையா நாயுடு நன்றி தெரிவித்தார்.
இது போக இன்று ராஜ்ய சபாவில் மத்திய பல்கலைக்கழகங்களின் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதேபோல் லோக்சபாவில் இன்று ஆற்றல் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.