பெகாசஸ்: எந்த விசாரணையும் கிடையாது... ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அஜய் குமார் பொளேர் ரிப்ளை
டெல்லி: பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக எந்த ஒரு விசாரணைக்கும் உத்தரவிட முடியாது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அஜய்குமார் பதிலளித்துள்ளார்.
பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் மிகப் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. இந்த விவகாரத்தால் நாடாளுமன்றம் இன்று 4-வது நாளாக முடக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மூத்த காங்கிரஸ் தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெகாசஸ் விவகாரம் குறித்து மத்திய அரசு மீது சரமாரி குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார்.

இஸ்ரேலின் ஆயுதம்
செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பெகாசஸ் ஸ்பைவேரை ஒரு ஆயுதமாக இஸ்ரேல் வகைப்படுத்தி வைத்துள்ளது. பெகாசஸ் ஸ்பைவேரானது தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடியது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நாட்டுக்கும் அரசியல் அமைப்புகளுக்கும் எதிராக பயன்படுத்தி இருக்கின்றனர்.

அரசியலுக்காக ஸ்பைவேர்
இந்தியாவில் பெகாசைஸ் ஸ்பைவேரை மத்திய அரசு அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தி இருக்கிறது. ரபேல் ஊழல் விசாரணைகளைத் தடுக்க பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி இருக்கின்றனர்.

நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை
என்னுடைய செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. இந்த ஒட்டுகேட்பு குறித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும்.

அமித்ஷா பதவி விலக வேண்டும்
தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டிய பெகாசைஸ் ஸ்பைவேரை அரசியலுக்காக பயன்படுத்தி இருக்கின்றனர். கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க பெகாசைஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தி இருந்தார்.

நோ விசாரணை- மத்திய அரசு
இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் அளித்த பதில்: பெகாசைஸ் விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் அனைத்துவிதமான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த பிரச்சனையில் எந்த ஒரு விசாரணையும் தேவைப்படவில்லை. விசாரணை என்ற பேச்சுக்கே இடமும் இல்லை. அரசியலில் தோற்றுப் போனவர்கள், வேறு பிரச்சனை இல்லாததால் இதனைப் பற்றி பேசுகின்றனர். இவ்வாறு அஜய்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications