சீனா செல்ல நேரமிருக்கிறது.. தலைநகரில் போராடும் விவசாயிகளை சந்திக்க நேரமில்லையா? பாயும் பிரியங்கா
டெல்லி: பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குச் செல்ல பிரதமர் மோடிக்கு நேரமிருக்கிறது ஆனால், தலைநகரில் போராடும் விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லையா என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகரில் சுமார் 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தின டிராக்டர் பேரணிக்குப் பின் போராட்டம் நடைபெறும் இடங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இருப்பினும், விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.

பிரியங்கா காந்தி
இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் ஷகாரன்பூரில் இன்று நடைபெற்ற கிசான் மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். கொரோனா பரவல் காரணமாக ஷகாரன்பூரில் மக்கள் ஒன்றுகூட உத்தரப் பிரதேச அரசு தடை விதித்திருந்தது. அரசின் தடை உத்தரவை மீறியே இந்த கூட்டம் நடைபெற்றது. அங்கிருக்கும் சகும்பரா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரியங்கா காந்தி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

யார் தேசவிரோதி
அப்போது பேசிய பிரியங்கா காந்தி, "அரசு விவசாயிகளையோ அல்லது அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதையே இன்னும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் (அரசு) போராடும் விவசாயிகளைத் தேச விரோதிகள் என்று அழைக்கிறார்கள், ஆனால் உண்மையில், அவர்கள்தான் தேச விரோதிகள். அவர்கள் விவசாயிகளைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கிறார்கள்.

இந்திய விவசாயிகள்
அதையும் தாண்டி நமது நாட்டின் விவசாயிகளைச் சந்தேகிக்கிறார்கள், ஆனால், நமது விவசாயிகள் ஒருபோதும் தேசத்திற்கு எதிராக இருக்க மாட்டார்கள். விவசாயிகளின் இதயமும் அவர்களின் வேலையும் நாட்டிலுள்ள நிலத்துக்கானது. இந்த நிலத்திலேயே தான் அவர்கள் இரவும் பகலும் வேலை செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களால் எப்படி தேசத்தைக் காட்டிக் கொடுக்க முடியும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பிரதமருக்கு நேரமில்லை
தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசிய அவர், "பிரதமர் மோடிக்குப் பாகிஸ்தான் செல்லவும் சீனா செல்லவும் நேரம் இருக்கிறது. ஆனால், அவரது சொந்த தொகுதியின் அருகிலேயே போராடும் விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லை. பிரதமரே நாடாளுமன்றத்தில் விவசாயிகளை அவமானப்படுத்தும் வகையில் பேசுகிறார். இந்த நாட்டை தன்னிறைவு தேசமாக மாற்றியவர்கள் விவசாயிகள், ஆனால் அவர்களுக்கு எதிராக இந்த விவசாய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது" என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications