விவசாயிகளுக்கு எதிராக பாஜகவினரை ஆயுதம் எடுக்க சொன்ன ஹரியானா அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு எதிராக பாஜகவினர் ஆயுதம் எடுக்க வேண்டும் என்று சொன்ன ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 10 மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஹரியானா, உ.பி.யிலும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஹரியானாவில் ஆளும் பா.ஜ.க. அரசு, போராடும் விவசாயிகள் மீது போலீஸ் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுகிறது. போராடிய விவசாயிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
அப்போது பேசிய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியினரும் ஆயுதங்களை கையில் எடுங்கள்.. போராடும் விவசாயிகளால் பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் தாக்குதல் நடத்துங்கள்.. 500, 700, 1,000 பேர் என ஆயுதங்களை கையில் எடுங்க என்றார். ஒரு மாநில முதல்வரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. இதையடுத்து தமது கருத்தை அவர் திரும்பப் பெற்றார்.
இந்த நிலையில்தான் ஹரியானா அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து பேசியிருக்கிறார். ஹரியானாவில் 806 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை இன்போசிஸ் நிறுவனம் கட்டியிருக்கிறது. இதனை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி ஹரியானாவில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மனோகர் லால் கட்டார் தலைமையில் நேர்மையான அரசு அமைந்திருக்கிறது. இது தொடர்பாக ஊடகங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என கூறினார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்த மனோகர்லால் கட்டார் அரசுக்கு பிரதமர் மோடியின் இந்த பாராட்டு சற்று நிம்மதியைக் கொடுத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
அதேநேரத்தில் விவசாயிகளை கொடூரமாக ஒடுக்கும் மனோகர் லால் கட்டார் தலைமையிலான ஹரியானா அரசை பிரதமர் மோடி பாராட்டி இருப்பது விவசாயிகளிடையே கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.