இருமுறை பிரதமரானால் போதாதா என "அவர்" கேட்டார்! ஓய்வு குறித்து பிரதமர் மோடி பரபர..யார் அவர் தெரியுமா
டெல்லி: காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கூறியதாக முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக கடும் முயற்சி எடுத்து வருகிறது.
அசத்தும் அசானி புயல்.. அடுத்த 4 நாட்களுக்கு மழை.. மினி ஊட்டியாகும் சென்னை.. ஆஃப் மோடில் ஃபேன்!
இதற்காகக் குஜராத் மாநிலத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அப்படி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தான் பிரதமர் நரேந்திர மோடி சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
குஜராத்
குஜராத்தில் உள்ள விதவைகள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு அம்மாநில அரசின் நிதி உதவித் திட்டங்கள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் கலந்து கொண்டார். அப்போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர் ஒருவர் தன்னிடம் இரண்டு முறை பிரதமரானால் போதும் என்று கூறியதாகவும் இருப்பினும் தனது வேகத்தைக் குறைக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் பிரதமர் மோடி உறுதிப்படத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், "ஒரு நாள் மிகப் பெரிய தலைவர் ஒருவர் என்னைச் சந்தித்தார். அவர் எங்களை அரசியல் ரீதியாக அடிக்கடி எதிர்க்கும் ஒரு நபர் தான். ஆனால், அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். சில விஷயங்களில் மத்திய அரசின் முடிவுகளில் அவருக்கு உடன்பாடு இல்லை. இதனால் அவர் என்னைச் சந்திக்க வந்தார்.
இருமுறை பிரதமரானால் போதும்
அப்போது அவர் என்னிடம் சொன்னார். மோடி ஜி, நாடு உங்களை இரண்டு முறை பிரதமராக்கியுள்ளது, இப்போது உங்களுக்கு என்ன வேண்டும். ஒருவர் இரண்டு முறை பிரதமரானால் எல்லாவற்றையும் சாதித்துவிட்டார் என்று தானே அர்த்தம். அவருக்கு மோடி ஒரு வித்தியாசமான நபர் என்பது தெரியாது என்றே நினைக்கிறேன். குஜராத் நாட்டு மக்கள் தான் என்னை உருவாக்கியது.
ஓய்வெடுக்கும் எண்ணம் இல்லை
அதனால் தான், என்ன நடந்ததோ அது நடந்தது என்பதிலோ அல்லது இப்போது நான் ஓய்வெடுக்க வேண்டும் என்பதிலோ எனக்கு நம்பிக்கை இல்லை. எனது கனவு நிறைவடையும் வரை நான் ஓய்வு எடுக்க மாட்டேன். அரசின் நலத்திட்டங்கள் 100 சதவீதம் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு" என்று அவர் தெரிவித்தார்.
யார் அவர்
பிரதமர் நரேந்திர மோடி தனது பேச்சில் யார் அந்த தலைவர் என்பதைக் குறிப்பிடவில்லை. இருந்த போதிலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கடந்த மாதம் தான் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த இருந்தது குறிப்பிடத்தக்கது. சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் மற்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் குடும்ப உறுப்பினர்கள் மீது மத்திய அமைப்புகளின் நடவடிக்கை குறித்து பேசப் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.