மோடி பாதுகாப்பில் குளறுபடி: பிற விசாரணைகள் ரத்து! 4 பேர் விசாரணை குழு அமைத்து உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: பஞ்சாபில் பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக நடந்து வரும் பிற விசாரணைகளையும் ரத்து செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதிண்டா என்ற இடத்தில் சென்றபோது விவசாயிகள் அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்டதால் பிரதமர் வாகனம் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. இதனால பதிண்டா பகுதி மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்வாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது.

பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி
இந்த பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் மோடி தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேர்ந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே விசராணை நடந்து வருகிறது.

மத்திய அரசு முன்வைத்த வாதம்
உச்சநீதிமன்றம் இதனை அவசர வழக்காக விசாரித்து வருகிறது. பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் விவகாரத்தில் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கனவே முறையிட்டது. பாதுகாப்பு மீறல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். நீதிமன்றம் என்ன நினைக்கிறதோ அதைச் செய்யலாம் என்று பஞ்சாப் அரசும் கூறியது.

4 பேர் கொண்ட விசாரணை குழு
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை தொடங்கியபோது மத்திய அரசும், பஞ்சாப் அரசும் கடுமையான வாதங்களை முன்வைத்தது. இதனை கேட்ட நீதிபதிகள் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது பற்றி விசாரிக்க நான்கு பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து அதிரடியாக உத்தரவிட்டனர்.

விசாரணை குழுவில் யார்? யார்?
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சண்டிகர் டிஜிபி, என்ஐஏ ஐஜி, உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு எப்படி ஏற்பட்டது? என்பது பற்றி விசாரணை நடத்துவது மிகவும் அவசியம் என்று கூறிய நீதிபதிகள் தற்போது இது தொடர்பாக நடந்து வரும் அனைத்து விசாரணைகளையும் ரத்து செய்யும்படியும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications