நேதாஜியின் 'ஹாலோகிராம்' சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.. அது என்ன ஹாலோகிராம்? முழு விவரம்
டெல்லி: டெல்லியில் முப்பரிமாண மின் ஒளி வடிவிலான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஏற்கனவே திட்டமிட்டபடி நேதாஜியின் பிரம்மாண்ட கிராணைட் சிலை அங்கு அமைக்கப்பட உள்ளது.
நமது இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி உள்ளிட்டவர்கள் அரும்பாடு பட்டு நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர். இந்த வகையில் 'சுதந்திரம் என்பது கெஞ்சி கேட்டு பெறுவதில்லை' என்று கூறி ஆங்கிலேயர்களுக்கு எதிராக துணிச்சலுடன் களமிறங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை ஒழிக்க ராணுவ வீரர்களைத் திரட்டி பெரும் போர் புரிந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் அவர். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய , வீர, தீரம்மிக்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வகையில் நேதாஜியின் 125-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

மோடியின் அறிவிப்பு
நேதாஜியின் பிறந்தநாளின்போது தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு கிரானைட் கல்லால் ஆன பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.அவருக்கு இந்தியா பெரிதும், கடமைப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறி இருந்தார்.

'ஹாலோகிராம்' சிலை
இந்த நிலையில் தலைநகர் டெல்லி இந்தியா கேட் பகுதியில் மின் ஒளி வடிவிலான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். நேதாஜியின் 125-வது பிறந்தநாளில் சிலை திறக்கப்பட்டுள்ளது. 'ஹாலோகிராம்' எனப்படும் இந்த முப்பரிமாண மின் ஒளி வடிவிலான சிலை லேசர் முறையில் இந்தியா கேட்டில் ஒளிரும்.

கிராணைட் சிலை நிறுவப்படும்
ஏற்கனவே திட்டமிட்டபடி நேதாஜியின் பிரம்மாண்ட கிராணைட் சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும். அதுவரையிலும் முப்பரிமாண மின் ஒளி வடிவிலான நேதாஜி சிலை மிளிரும் என்று அறிவிக்கப்படவுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் தாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரில் பல்வேறு விருதுகளை பிரதமர் மோடி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அது என்ன ஹாலோகிராம்?
மெய்நிகர் 3-பரிமாண படமே ஹாலோகிராம் எனப்படுகிறது. இப்போது 3டி ஹாலோகிராம் தொழில்நுட்பத்தின் உதவியுடன்தான் சிலை இந்தியா கேட்டில் நேதாஜியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த ஹாலோகிராம் தொழில்நுட்பம் ஒரு மெய்நிகர் 3-பரிமாண படத்தை காட்ட ஒரு புரொஜெக்டரைப் பயன்படுத்துகிறது. புரியும்படி சொல்வது என்றால் ஹாலோகிராம் என்பது நிஜமாகத் தோன்றும், ஆனால் அது உண்மையில் நிஜமானதல்ல. ஹாலோகிராம்கள் உண்மையான இயற்பியல் பொருட்களைப் பிரதிபலிக்கும் ஒளிக்கற்றைகளின் குறுக்கீட்டால் உருவாகின்றன. நேதாஜியின் ஹாலோகிராம் சிலை ஒரு சக்திவாய்ந்த 4K புரொஜெக்டரால் இயக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications