மலேசிய பல்கலையில் திருவள்ளுவர் இருக்கை.. இந்திய தொழிலாளர்களுக்கு எளிதாகும் விசா... மோடி அறிவிப்பு
டெல்லி: மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்- பிரதமர் நரேந்திர மோடி இடையே டெல்லியில் நடந்த இன்றைய சந்திப்பில் மலேசியாவிற்கு இந்திய தொழிலாளர்கள் எளிதாக செல்லும் வகையில் விதிகளை மாற்றுவது உள்பட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்து இன்று பேசினார். இருவருமே, மலேசியா இந்தியா இடையேயான நட்புறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், இந்திய தொழிலாளர்கள் மலேசியாவுக்கு செல்வதை எளிதாக்குவது, மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பது உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடனான சந்திப்புக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்த அறிவிப்பில், "நான் பிரதமரான பிறகு அன்வர் இப்ராஹிம் இந்தியாவுக்கு வருகை தருவது இது முதல்முறையாகும். என்னுடைய மூன்றாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு வந்துள்ள உங்களை வரவேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையில் பல்வேறு விஷயங்களை மேம்படுத்தப்பட்ட உத்திசார் கூட்டுமுயற்சி பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில், பிரதமர் அன்வர் இப்ராஹிமின் ஆதரவுடன், இரு நாடுகளுக்கும் இடையோயான நட்புறவு புதிய வேகத்தையும், சக்தியையும் பெற்றிருக்கிறது.
இன்று நாங்கள் பரஸ்பர ஒத்துழைப்புக்கான அனைத்து துறைகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம். நமது இருதரப்பு வர்த்தகம் நிலையான முன்னேற்றம் அடைந்து வருவதை நாங்கள் கவனித்தோம். இந்தியாவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தகத்தை இப்போது இந்திய ரூபாய் (INR) மற்றும் மலேசிய ரிங்கிட்களில் (MYR) செயலாக்க முடியும். கடந்த ஆண்டு மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு 5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டது.
இன்று இருநாடுகளுக்கும் இடையேயான கூட்டு முயற்சியை "விரிவான உத்திசார்ந்த கூட்டாண்மை" என்ற அளவில் உயர்த்த முடிவு செய்திருக்கிறோம். இந்தியா மலேசியா இடையே பொருளாதார ஒத்துழைப்பில் இன்னும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்று நம்புகிறோம். அதற்கு இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு விரிவுபடுத்தப்பட வேண்டும். செமிகண்டக்டர், ஃபின்டெக், பாதுகாப்புத் தொழில், செயற்கை தொழில்நுட்பம் மற்றும் குவாண்டம் போன்ற புதிய தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே மேம்படுத்த வேண்டும்.
இந்தியா, மலேசியா இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். டிஜிட்டல் குழுவை உருவாக்கவும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புக்கான புத்தொழில் நிறுவனங்களின் கூட்டணியை உருவாக்கவும் முடிவு செய்திருக்கிறோம். இந்தியாவின் யுபிஐ மற்றும் மலேசியாவின் பேநெட் ஆகியவற்றை இணைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இருநாடுகளுக்கிடையே பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும் நாங்கள் ஒருமித்த கருத்துடன் உள்ளோம். இந்தியாவும், மலேசியாவும் பல நூற்றாண்டுகளாக ஒன்றோடொன்று பல்வேறு விஷயங்களில் இணைந்துள்ளன. மலேசியாவில் வசிக்கும் சுமார் 30 லட்சம் இந்தியர்கள் இரு நாடுகளுக்கும் இடையே பாலமாக திகழ்கின்றனர்.
தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான இன்றைய ஒப்பந்தம், இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை பணியமர்த்துவதை ஊக்குவிப்பதோடு அவர்களின் நலன்களை நிச்சயம் பாதுகாக்கும். மக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தி இருக்கிறோம்.
மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குதல், அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இணைய பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன படிப்புகளுக்கு ஐடிஇசி, கல்வி உதவித்தொகையின் கீழ், மலேசியாவுக்கு பிரத்யேகமாக 100 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது.
"துங்கு அப்துல் ரஹ்மான்" மலேசியாவில் ஆயுர்வேத இருக்கை ஒன்று அமைக்கப்படுகிறது. இது தவிர, மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அனைத்து சிறப்பு நடவடிக்கைகளிலும் ஒத்துழைத்த பிரதமர் அன்வர் மற்றும் அவரது குழுவினருக்கு நான் மனதாக நன்றி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications