எதுக்கு வம்பு.. இந்தியில் வேண்டாம்.. ஆங்கிலத்தில் பதவியேற்ற நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர்!
டெல்லி : மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் இருவரும் ஆங்கிலத்தில் பதவியேற்றுள்ளனர்.
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்றார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வந்தார். நரேந்திர மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்று கொண்டது. இதில் மொத்தமாக 30 மத்திய அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பொறுப்பேற்று கொண்டுள்ளனர்.

மத்திய அமைச்சரவையில் 24 மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 27 ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களும், 10 பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர்களும், 5 பட்டியலின பழங்குடியினருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சர்களுக்கு அடுத்தடுத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மத்திய அமைச்சராக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜேபி நட்டா, சிவராஜ் சிங் செளஹான் ஆகியோர் இந்தியில் உறுதி மொழி எடுத்து கொண்டனர். அதன்பின் மத்திய அமைச்சராக பொறுப்பேற்க வந்த நிர்மலா சீதாராமன் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்து கொண்டார். தமிழ்நாட்டை பின்னணியாக கொண்ட நிர்மலா சீதாராமன் ஆங்கிலத்தில் உறுதி மொழி எடுத்துள்ளார்.
இவர் பல்வேறு தருணங்களில் தனக்கு இந்தி முழுமையாக பேச வராது என்று கூறியுள்ளார். இவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், சர்பானந்த சோனோவால் ஆகியோர் ஆங்கிலத்தில் பதவியேற்றுள்ளனர். பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பெரும்பாலானோர் இந்தியிலேயே உறுதிமொழி எடுத்து கொண்ட நிலையில், இவர்கள் மூவர் மட்டும் ஆங்கிலத்தில் எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications