சர்வதேச பிரச்சனையாக பாஜகவினரின் நபிகள் குறித்த அவதூறு- இந்தியாவை ஒருங்கிணைக்கும் தருணம் இது- ராகுல்
டெல்லி: நபிகள் நாயகம் குறித்த பாஜகவினரின் அவதூறு சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் இந்தியாவை ஒருங்கிணைக்கும் தருணம் இது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டிவி விவாதம் ஒன்றில் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபி குறித்து அவதூறாக கருத்துகளை வெளியிட்டார். அதேபோல் சமூக வலைதளங்களிலும் நபிகள் குறித்து பாஜகவின் நவீன் ஜிண்டால் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு பின்னர் நீக்கி இருந்தார்.

கொந்தளிப்பும் வன்முறையும்
பாஜக தலைவர்களின் இத்தகைய கருத்துகள் இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் மிகப் பெரும் வன்முறையும் வெடித்தது. இப்போது இந்த விவகாரம் சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

வளைகுடா நாடுகள் கண்டனம்
பாஜக பிரதிநிதிகளின் இக்கருத்துகள், இந்திய அரசின் கருத்துகளாக பார்க்கப்படுகிறது. இதனால் ஈரான், கத்தார், குவைத், செளதி அரேபிய ஆகியவை அந்நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு இந்த விவகாரம் தொடர்பாக சம்மன் அனுப்பி உள்ளன. இது தொடர்பாக செளதி அரேபிய அரசு கூறுகையில், பிற மத நம்பிக்கைகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது. இதனையடுத்து நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் மீது பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனாலும் பிரச்சனை ஓயவில்லை.
Recommended Video

ராகுல் ட்வீட்
பாஜகவினரின் அவதூறு பிரச்சனை நமது நாட்டிலும் சர்ச்சையாக வெடித்துள்ளது. வளைகுடா நாடுகளிடம் இந்தியா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? பாஜகதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதனிடையே மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், வெறுப்பு வெறுப்பைத் தான் பிரசவிக்கும். அன்பும், சகோதரத்துவமும் நிறைந்த பாதையே நமது இந்தியாவை முன்னேற்றச் செய்யும். இந்தியாவை ஒன்றிணைக்கக் கூடிய தருணம் இது என்று பதிவிட்டுள்ளார்.

காங். கண்டனம்
முன்னதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், பா.ஜ.க இந்தியாவைத் தனது அரசியலுக்கு அடிபணியும் இருண்ட யுகத்திற்குத் தள்ளியுள்ளது. பா.ஜ.க தலைவர்களும், அதன் உறுப்பினர்களும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தில் பிளவை உருவாக்கியது தான் என விமர்சித்திருந்தது. மேலும் பா.ஜ.க தமது அதிகார ஆசையால் அரசியலுக்கு ஏற்படுத்திவரும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் காங்கிரஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications