பாயும் உபா சட்டம்.. இதுவரை கைது செய்யப்பட்டவர்களில்.. எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர் தெரியுமா?
டெல்லி: நாடு முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்கள் UAPA சட்டத்தின் கைது செய்யப்படுவது வழக்கம். ஆனால் இவ்வாறு கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்களில் 97.2% பேர் குற்றமற்றவர்கள் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமல்லாது கடந்த 2009லிருந்து நடப்பாண்டு ஆகஸ்ட் வரை இந்த சட்டத்தின் கைது செய்யப்பட்டவர்களில் 80% பேர் பாஜக ஆட்சியில்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறது இந்த புள்ளிவிவரம்.
தற்போது PFI எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை உபா (UAPA) சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை செய்திருக்கும் நிலையில் தற்போது இந்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
திருமுருகன் காந்தி மீதான சட்டவிரோத செயல் தடுப்புச் சட்ட வழக்கு ரத்து.. எழும்பூர் கோர்ட் அதிரடி
உபா சட்டம்
இந்தியாவின் பல கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் உபாவை போன்று கடுமையான வரைமுறைகளுடன் வேறெந்த சட்டமும் இல்லையென சொல்லப்படுகிறது. மற்ற குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 15 நாட்கள் ரிமான்டு வழங்கப்படும். ஆனால் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் 30 நாட்கள் ரிமான்டு செய்யப்படும். அதேபோல குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 180 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும். சரி யாருக்கு இந்த சட்டம் பொருந்தும் என்றால், இந்நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் எதிராக எழுத்தின் மூலமாகவோ, பேச்சின் மூலமாகவோ அல்லது இன்ன பிற வழிகளில் செயல்படுகிறார்கள் என காவல்துறை யாரை எல்லாம் சந்தேகிக்கிறதோ அவர்கள் மீதெல்லாம் இந்த சட்டம் பாயும். இதனால் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைப்பது மிகவும் கஷ்டம்.
புள்ளி விவரம்
'ஸ்டான் சுவாமி' நினைவிருக்கிறதா? இவர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலின் கீழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடைசி வரை சுதந்திரமாக நடமாட முடியாமலேயே உயிரிழந்து போனார். தற்போது PFI அமைப்புக்கும் இந்த சட்டத்தின் கீழ்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் பலர் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு இருக்கையில், சில முக்கிய புள்ளி விவரங்களை People's Union for Civil Liberties (PUCL) அமைப்பு வெளியிட்டுள்ளது.
தண்டனை
இதன்படி, நாம் மேலே பேசினோம் இல்லையா? இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஜாமீன் கிடைக்காது என்று, அப்படி ஜாமீன் கிடைக்காமல் பல ஆண்டு காலம் சிறையிலிருந்து பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்களில் 97.2% பேர் குற்றமற்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது கடந்த 2015 முதல் 2022 வரை இந்த UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் வெறும் 2.8% பேரின் குற்றங்கள் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளன.
பாஜக அரசு
இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் இந்த சட்டத்தை பாஜகதான் அதிகமாக பயன்படுத்தியுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. கடந்த 2009 முதல் 2022 ஆகஸ்ட் வரை ஒப்பிடுகையில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 20% அளவுதான் இந்த உபா சட்டத்தை பயன்படுத்தி இருக்கிறது. அதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் 80% அளவுக்கு இந்த சட்டத்தை பயன்படுத்தியிருக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களிலிருந்து பெறப்பட்டிருப்பதாக PUCL தெரிவித்துள்ளது. இந்த வழக்குகளை NIAதான் கையாளும்.
"செயற்பாட்டாளர்களை செயலிழக்க வைப்பதற்காகதான் உபா சட்டம் கொண்டுவரப்பட்டது" என்று அருந்ததி ராய் ஏற்கெனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.