'கோவாக்சின் தரத்தில் சிக்கல்.. பற்றாக்குறைக்கு அதுவே காரணம்..' வேக்சின் வல்லுநர் குழு தலைவர் தகவல்
டெல்லி: பெங்களூருவில் உள்ள புதிய வேக்சின் உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியின் முதல் சில தொகுதிகள் சரியான தரத்தில் இல்லை என்பதால் அவை நிராகரிப்பட்டதாக மத்திய அரசின் வேக்சின் வல்லுநர் குழு தலைவர் என்.கே அரோரா தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் வேக்சின் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவு படுத்தப்பட்டது. இந்தியாவில் முக்கியமாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு வேக்சின்களை கொண்டே தடுப்பூசி பணிகள் நடைபெறுகிறது.
இருப்பினும், இதுவரை தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு வேக்சின் உற்பத்தி இல்லை. குறிப்பாக, கோவாக்சின் தடுப்பூசிக்கு நாடு முழுவதும் பற்றாக்குறை நிலவுகிறது.
தடுப்பூசியிலும்கூட ஊழல்? பிரேசில் நிறுவனங்களுடன் கோவாக்சின் ஒப்பந்தம் ரத்து.. என்ன நடந்தது
வேக்சின் உற்பத்தி
மறுபுறம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் வேக்சின் போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கேற்ப வேக்சின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. முதலில் ஹைதராபாத்தில் மட்டும் வேக்சினை உற்பத்தி செய்துவந்த பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்து அகமதாபாத், பெங்களூர் நகரங்களிலுள்ள மையங்களிலும் வேக்சின் உற்பத்தி செய்யத் தொடங்கின.
சரியான தரத்தில் இல்லை
இந்நிலையில் பெங்களூரில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் சில தொகுதி கோவாக்சின் சரியான தரத்தில் இல்லை என்பதால் அவை நிராகரிப்பட்டதாகவும் இதனால் தான் கோவாக்சின் தட்டுப்பாடு தொடர்கிறது என்றும் மத்திய அரசின் வேக்சின் வல்லுநர் குழு தலைவர் என்.கே அரோரா தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அவர் கூறுகையில், "கோவாக்சின் உற்பத்தியை அதிகரித்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ராக்கெட் அறிவியல்
தடுப்பூசி உற்பத்தி கிட்டத்தட்ட ராக்கெட் அறிவியல் போன்றது தான். அனைவரையும் போல நாங்களும் கோவாக்சின் உற்பத்தி அதிகரிக்கும் என்றே எதிர்பார்த்தோம். பெங்களூரில் உள்ள புதிய மையத்தில் கோவாக்சின் உற்பத்தி தொடங்கப்பட்டது. மற்ற மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் இதில் களமிறக்கப்பட்டுள்ளன. பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 10 முதல் 12 கோடி வேக்சின் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தரத்தில் சிக்கல்
பெங்களூரு நகரில் அமைந்துள்ள வேக்சின் உற்பத்தி மையம் உலகளாவிய அளவில் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் மையங்களில் ஒன்று. ஆனால் அங்குத் தயாரிக்கப்பட்ட முதல் இரண்டு பேட்ஜ் வேக்சின் தரச் சோதனையை வெற்றிகரமாகக் கடக்கவில்லை. அது சரியான தரத்தில் இல்லை. இது தான் அங்குப் பிரச்சினை. ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது பேட்ஜ்கள் நன்றாக உள்ளது. அடுத்த நான்கு அல்லது ஆறு வாரங்களில் கோவாக்சின் உற்பத்தி அதிகரிக்கும் என நம்புகிறோம்.
விரைவில் அதிகரிக்கும்
சரியான தரத்தில் இல்லாத வேக்சின்களை நாங்கள் தடுப்பூசி பணிகளுக்கு அனுப்பவில்லை. இதனால் தான் கோவாக்சின் பற்றாக்குறை தற்போதும் தொடர்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் வேக்சின் போட வேண்டும் என்றால் மாதத்திற்கு நாம் 30 கோடி பேருக்கு வேக்சின் போட வேண்டும். அதற்கேற்ப கோவாக்சின் உற்பத்தியும் அதிகப்படுத்த வேண்டும். இது கடினமான பணிதான். ஆனால் சாத்தமான ஒன்று தான். இப்போது தரம் பற்றிய சிக்கல் தீர்ந்துவிட்டதால், வரும் காலங்களில் கோவாக்சின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றே எதிர்பார்க்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.