ராகுல் காந்தி கையில் இருக்கும் "ரெட்" கவர்.! அது சீன அரசியலமைப்பு சட்டம்தான்- பாஜக பிஸ்வா சர்மா பரபர
டெல்லி: ராகுல் காந்தி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்குப் பதிலாகக் கையில் சீன அரசியலமைப்பு சட்டத்தை எடுத்துக் கொண்டு செல்வதாக அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நமது நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் 4 கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்துவிட்டது. இன்னும் 3 கட்ட வாக்குப்பதிவு மட்டும் நடக்க உள்ளது.

இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இதனால் பிரச்சாரமும் தீவிரமாக நடந்து வருகிறது.
சீன அரசியலமைப்பு சட்டம்: இதற்கிடையே ராகுல் காந்தி மீது அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பிரச்சார கூட்டங்களில் காண்பிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டமே இல்லை என்று அவர் கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு நீல நிறத்தில் தான் கவர் இருக்கும் என்ற அவர், சீன அரசியலமைப்பை ராகுல் காந்தி எடுத்துச் செல்கிறாரா என்று செக் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பிஸ்வா சர்மா: இது தொடர்பாக பிஸ்வா சர்மா மேலும் கூறுகையில், "ராகுல் காந்தி சீன அரசியலமைப்பை எடுத்துச் செல்வது போலவே தெரிகிறது. நமது அரசியலமைப்பிற்கு நீல நிற கவர் தான் இருக்கும்.. அதில் கொள்கையின் வழிகாட்டுதல் என்று ஒரு அத்தியாயம் இருக்கிறது. அதில் நம் நாட்டில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.. ஆனால் ராகுல் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார். எனவே, அவர் கையில் இருப்பது சீன அரசியலமைப்பு என்றே நினைக்கிறேன்" என்றார்.
காங்கிரஸ் பதிலடி: பிஸ்வா சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக அசாம் காங்கிரஸ் தலைவர் பூபன் குமார் போரா, "ஹிமந்தா உங்களுக்கு நிறக்குருடு பிரச்சினை இல்லை என்பது தெரிகிறது. அதேநேரம் உங்களுக்கு அ்டிப்படை அறிவு கூட இல்லை என்பது உங்கள் பேச்சில் தெரிகிறது. இந்திய அரசியலமைப்பின் கவர் இந்திய பாஸ்போர்ட்டைப் போல நிலையான நிறத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அது சிவப்பு, பச்சை, நீலம் என எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்ரே சிவ சேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதியும் அவரது பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "இது நல்ல ஜோக்.. லோக்சபா, ராஜ்யசபாவில் உள்ள உங்கள் பாஜக எம்பிக்களிடம் கேளுங்கள்.. இந்த அரசியலமைப்பு சட்டத்தின் நகலைத் தான் அவர்கள் வைத்திருப்பார்கள்" என பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி: லோக்சபா தேர்தல் பிரச்சாரங்களில் அரசியலமைப்பு சட்டத்தின் நகலை ராகுல் காந்தி கையோடு எடுத்துச் செல்கிறார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் தாக்குதலில் இருந்து அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுமாறு மக்களிடம் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் சாசனத்தை ராகுல் காந்தி பயன்படுத்துவது தவறானது எனக் கடுமையாக விமர்சித்தார். மேலும் ராகுல் காந்தி அரசியலமைப்பு சட்டத்தின் நகலை எடுத்து மட்டுமே சென்றுள்ளதாகவும் அதைப் படிக்க அவர் மறந்துவிட்டதாகவும் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் இப்போது அசாம் முதல்வரும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியை சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications