ராஜ்யசபா தேர்தல் 2022: வெல்லப்போவது யார்..மல்லுக்கட்டும் அரசியல் கட்சிகள் - குதிரை பேரம் ஜெயிக்குமா
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாக போகிற 57 ராஜ்ய சபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது
டெல்லி: மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 16 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் வெல்ல குதிரை பேரம் நடைபெறும் என்ற புகார் எழுந்துள்ளதால் சிறப்பு கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. வாக்குப்பதிவை வீடியோ எடுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராஜ்ய சபாவில் மொத்தம் 250 எம்பிக்கள் வரை இருக்க முடியும். இதில் 238 பேர் எம்எல்ஏக்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அது போக 12 பேர் குடியரசுத் தலைவர் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். தற்போது 245 எம்பிக்கள் அவையில் இருக்கிறார்கள்.
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாக போகிற 57 ராஜ்ய சபா எம்.பி.க்களின் இடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளன. கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்; மகாராஷ்டிராவில் இருந்து தேர்வான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 6 எம்பிக்கள் பதவிக்காலம் முடிவு பெறுகிறது. இதில் திமுக இந்த முறை 4 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும். திமுக கூட்டணி சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஷ்குமார், ரா கிரிராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் சிவி சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் சார்பில் ப. சிதம்பரம் போட்டியிடுகிறார். இவர்கள் 6 பேருமே போட்டியின்றி தேர்வாகிறார்கள்.
உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ஜார்க்கண்ட், அரியானா, சத்தீஸ்கர், தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மேல்சபை எம்.பி.க்களுக்கான தேர்தல் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்து 41 பேர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 16 இடங்களுக்கான மேல்சபை தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது.
இந்த ராஜ்ய சபா எம்பி தேர்தலில், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் இருந்து 16 எம்பிக்கள் தேர்வாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாததாலும், சுயேட்சைகளின் போட்டியாலும், கூட்டணி குழப்பத்தாலும் எம்பி தேர்தலில் இவர்கள் வெற்றிபெறுவது சிக்கலாகி உள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளதால் பரபரப்பு கூடி உள்ளது. இதற்கான கடும் போட்டி இன்று நடக்கும்.
ராஜ்யசபா தேர்தல் 2022 LIVE: ராஜ்யசபா தேர்தல் 2022: வெல்லப்போவது யார் - இன்று வாக்குப்பதிவு
மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 இடங்களுக்கு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் பாஜகவிற்கு 2 இடம் கிடைப்பது உறுதியாகும். ஆனால் 6 வது இடத்தை பெறுவதில் சிக்கல் உள்ளது. பாஜக 3 பேரையும், சிவசேனா 2 பேரையும் நிறுத்தி உள்ளது. இதனால் ஒரு இடத்துக்கு போட்டி நிலவுகிறது.
கர்நாடகாவில் 4 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 6 பேர் போட்டியிடுகிறார்கள். பாஜக 3, காங்கிரஸ் கட்சி 2, மதசார்பற்ற ஜனதா தளம் ஒருவர் என களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் எம்எல்ஏக்கள் மட்டுமே ஓட்டு போட தகுதியானவர்கள். அதாவது கர்நாடகாவில் உள்ள 224 எம்எல்ஏக்களும் வாக்களிக்க தகுதியானவர்கள். பாஜவில் 119 எம்எல்ஏக்களும், காங்கிரசில் 69 எம்எல்ஏக்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியில் 32 எம்எல்ஏக்களும் உள்ளனர். தவிர 2 சுயேச்சை எம்எல்ஏக்கள், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவரும் உள்ளனர். ஓட்டுப்பதிவு பெங்களூர் விதானசவுதாவில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
4 உறுப்பினர் பதவிகளுக்கு 6 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதாவது பாஜக சார்பில் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர் சிங் ஆகிய 3 பேரும், காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர்கானும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் குபேந்திர ரெட்டி நிறுத்தப்பட்டிருக்கிறார்.
மாநிலங்களவை தேர்தலில் ஒரு உறுப்பினர் வெற்றி பெற 45 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி, பாஜ கட்சியின் எம்எல்ஏக்கள் பலத்தின் மூலம் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ் ஆகியோரும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலத்தின் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. ஆனால் 4வது உறுப்பினர் பதவிக்கு தான் பலத்த போட்டி நிலவுகிறது. 2 உறுப்பினர்கள் வெற்றி போக, பாஜக வசம் 32 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதாவது சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவரின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அக்கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள லெகர் சிங் வெற்றி பெற 13 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையாக உள்ளது.
அதே நேரத்தில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ் வெற்றி போக, 24 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. அதுபோல், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குபேந்திர ரெட்டி வெற்றி பெற 13 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதனால் 4வது உறுப்பினர் பதவியை கைப்பற்ற பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) வெற்றி பெற காங்கிரஸ் ஆதரவளிக்கும்படி, முன்னாள் முதல்வர் குமாரசாமி கேட்டுள்ளார். அதுபோல், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற, ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆதரவளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறி வருகிறார். இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால், அக்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. அந்த கட்சிகள் கூட்டணி அமைக்குமா? என்பது கேள்வி குறியாக உள்ளது. அதே நேரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.
ராஜஸ்தானில் 4 இடங்களுக்காக நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் 3 வேட்பாளர்களும், பாஜகவின் ஒரு வேட்பாளரும், பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக சுபாஷ் சந்திராவும் களத்தில் உள்ளனர். ஹரியானாவில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு 3 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. பாஜக ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா போட்டியிடுகிறார். இதனால் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு சந்தேகமாகி உள்ளது.
ராஜ்யசபா தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டு போடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் ஒவ்வொரு கட்சியும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர். இதற்கிடையே பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.