ஆதாரமற்ற பெகாசஸ் விவகாரத்தில்.. இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன்? ரவிசங்கர் பிரசாத் கேள்வி
டெல்லி: பெகாசஸ் விவகாரம் எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாதவை என விமர்சித்துள்ள முன்னாள் ஐடி துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளே இந்த ஸ்பைவேரை பயன்படுத்தும்போது இந்தியாவை மட்டும் குறிவைப்பதன் பின்னணி என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ குரூப் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி சர்வதேச அளவில் பல நூறு பேரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தி கார்டியன், வாஷிங்டன் டைம்ஸ் உள்ளிட்ட 16 ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேபோல இந்தியாவிலும் ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், நீதிபதி ஒருவர், 40க்கும் மேற்பட்ட செய்தியாளர்களின் மொபைல் எண்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

காங்கிரஸ்
மிகப் பெரிய பூதாகரமாக உருவாகியுள்ள இந்த பெகாசஸ் விவாகரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் எழுப்பினர். தேச பாதுகாப்பு தொடர்பான இந்த விஷயத்தில் பிரதமர் மோடி நேரடியாகப் பதில் சொல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ள காங்கிரஸ், இது தொடர்பாகப் பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஆதாரமற்றது
இந்நிலையில் இது குறித்து முன்னாள் ஐடி துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் இப்போது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது. இதனை பாஜக முற்றிலுமாக மறுக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆண்ட ஒரு கட்சிக்கு இது மிகவும் கீழ்த்தரமான ஒரு செயல். பெகாசஸ் விவகாரத்தில் பாஜக அல்லது மத்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக ஒரு சான்று கூட வரவில்லை.

சந்தேகம்
இதில் அம்னஸ்டி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைப் பல முறை எடுத்துள்ளன. அதை யாராவது மறுக்க முடியுமா? சரியாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு இந்த விவகாரம் வெளியாகியுள்ளது. அதுவே மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது, நாட்டில் முக்கியமான நிகழ்வுகள் நடக்கும்போது தான் இதுபோன்ற வன்முறைகளும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

இந்தியா குறி வைக்கப்படுகிறது
டிரம்ப் வருகையின் சமயத்தில் டெல்லி கலவரம் நடந்தது. முதலில் 2019 தேர்தலுக்கு முன்பு பெகாசஸ் விவகாரம் வெளியானது. இப்போது மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்பு மீண்டும் வெளியாகியுள்ளது. என்எஸ்ஓ நிறுவனமே இந்த அறிக்கையை நிராகரிக்கிறது. பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளே இந்த ஸ்பைவேரை பயன்படுத்துவதாக அந்நிறுவனம் கூறுகிறது. ஆனால் இந்தியாவை மட்டும் குறிவைப்பதன் பின்னணி என்ன?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications