சியாச்சினில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்.. 38 ஆண்டுகளுக்கு பின் உடல் மீட்பு.. உருகும் குடும்பம்
டெல்லி: சியாச்சினில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடல் 38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்ணீரோடு உருக்கமான விபரங்களை கூறியுள்ளனர்.
இந்திய ராணுவ பணி கடினம் எனினும் தேசத்துக்காக சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் விரும்புகின்றனர்.
இவ்வாறு நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவத்தில் இணையும் இளைஞர்கள் தீவிரவாத தாக்குதல், இருநாட்டு வீரர்கள் இடையேயான மோதல் உள்ளிட்டவற்றில் வீரமரணமடையும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.
இவ்வாறு நாட்டுக்காக போராடி வீரமரணம் அடையும் வீரர்களின் உடல்கள் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். சில வேளையில் ராணுவ வீரர்களின் உடல்கள் குடும்பத்தினருக்கே கிடைக்காத நிலை ஏற்படும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்நிலையில் தான் இந்திய ராணுவத்தில் கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ராணுவ வீரரின் உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
சென்னை மெரினா கடலில் மூழ்கிய சிறுவன்.. முதலுதவி அளித்து காப்பாற்றிய டிஜிபி சைலேந்திர பாபு
சியாச்சினில் பணி
இந்திய ராணுவத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியை சேர்ந்த சந்திர சேகரும் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1984ம் ஆண்டில் சியாச்சினில் 16 ஆயிரம் அடி உயரத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்த பகுதியை மீட்கும் பணியான ஆபரேஷன் மேக்தூத் இன் குழுவில் சந்திரசேகர் அங்கம் வகித்தார். இதையடுத்து அந்த குழுவில் ஈடுபட்ட அனைவரும் சியாச்சின் பனிப்பிரதேசத்தில் பணியாற்றி வந்தனர்.
பனிச்சரிவில் சிக்கிய வீரர்கள்
இந்நிலையில் தான் எதிர்பாராத விதமாக பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் சிக்கினர். 18 பேர் பலியாகினர். இதில் சந்திரசேகர் இறந்தார். இதில் 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் சந்திரசேகர் உள்பட 4 பேரின் உடல்கள் மீட்கப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வந்தது.
38 ஆண்டுக்கு பின் உடல் மீட்பு
இந்நிலையில் தான் இந்த மாதம் சியாச்சினில் பழைய பதுங்கு குழிக்குள் சந்திரசேகரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்மூலம் 38 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரசேகரின் உடல் அடையாளம் காணப்பட்டு எலும்புக்கூடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தியை கேட்டு அவர்கள் மிகவும் வருத்தமடைந்தனர்.
என்ன சொல்வது என தெரியவில்லை
வீரமரமடைந்த சந்திரசேகருக்கு தேவி (வயது 65) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கணவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டதை அறிந்து அவரது மனைவி தேவி கண்ணீர் சிந்தினார். இதுபற்றி தேவி கூறுகையில், ‛‛எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. என் கணவர் வீரமரணமடைந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டது. என் கணவர் காணாமல் போனபோது எனக்கு 25 வயது. நாங்கள் 1975ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் அடுத்த 9 ஆண்டுகளில் அவர் பனிச்சரிவில் சிக்கினார்.
தியாகம் நினைவு கூறப்படும்
அப்போது எனக்கு 2 மகள்களும் சின்னவயதாக இருந்தனர். ஒருவருக்கு நான்கு வயதும், இன்னொருவருக்கு ஒன்றரை வயதும் இருந்தது. உடல் கிடைக்காவிட்டாலும் கூட நாங்கள் அவருக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டோம். என் மகள்களை வளர்க்க மிகவும் சிரமப்பட்டேன். என் வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணித்தேன். பல தடைகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும் இரு மகள்களையும் வளர்த்துள்ளேன். நாங்கள் மெல்ல மெல்ல அவரை மறந்து வந்த நிலையில் தான் தற்போது உடல் கிடைத்துள்ளது. அவரது தியாகமும் நினைவுகூறப்படும்'' என்றார்.
மகள் கூறியது என்ன?
இதுபற்றி 42 வயது நிரம்பிய அவரது மூத்த மகள் கவிதா கூறுகையில், ‛‛இந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைவதா, கவலை அடைவதா என தெரியவில்லை. என் தந்தையின் உடலை நீண்ட நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பார்கள் என நான் நினைக்கவில்லை. இருப்பினும் இது ஆறுதலாக உள்ளது. இந்து முறைப்படி அவரது இறுதி சடங்குகளை நிறைவேற்றுவோம்'' என சோகமாக கூறினார்.