"உதய்பூர் படுகொலை வெறும் எதிர்வினை மட்டுமில்லை.. தாலிபான் மனநிலையின் வெளிப்பாடு!" ஆர்எஸ்எஸ் சுளீர்
டெல்லி: ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உதய்பூர் படுகொலை தொடர்பாக ஆர்எஸ்எஸ் தரப்பில் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டது.
Recommended Video
கடந்த ஜூன் 28ஆம் தேதி ராஜஸ்தானில் உதய்பூரில் டெய்லர் கன்ஹையா லால் தலை துண்டிக்கப்பட்டு மிக மோசமாகக் கொலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கன்ஹையா லால் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதற்காகவே அவர் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

எதிர்வினை இல்லை
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆர்எஸ்எஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் விளம்பர பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர், "உதய்பூர் சம்பவம் தாலிபான் மனநிலையால் வந்தது. இந்த தாலிபான் சம்பவம் ஒரு எதிர்வினை அல்ல. அது தூண்டுதலுக்கான எதிர்வினை அல்ல. உலகின் பலநாடுகளிலும் எவ்வித தூண்டுதலுமே இல்லாமல் இதுபோன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது.

பயங்கரவாதிகள்
உலகின் பல நாடுகளிலும் ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ், தாலிபான்கள் போன்ற பயங்கரவாத அமைப்புகள் உள்ளன. நம் நாட்டில், சிமி மற்றும் பிஎஃப்ஐ போன்ற அமைப்புகள் உள்ளன. எனவே, இதை ஆத்திரமூட்டல் நடவடிக்கையின் எதிர்வினையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி நம்புவோர் இது குறித்து ஆராய்ந்தால் அவர்களுக்கு உண்மை புரிந்துவிடும். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களின் மனநிலை மற்றும் நம்பிக்கை அமைப்பைப் புரிந்துகொள்வது முக்கியம்.

இந்தியா
நம்மைப் பொறுத்தவரை இந்தியா என்பது ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வதன் மூலம் பலமடையும். ஒரு நல்ல மனிதர் என்பவர் மற்றொரு நல்லவருக்கு உதவ வேண்டும். அமைதியைச் சீர்குலைக்க முயல்பவர்களைத் தடுக்கவும் போதுமான வலிமையுடன் இருக்க வேண்டும். பிரச்சினைகள் ஏற்பட்டால் அதைக் கையாள அரசியலமைப்பில் வழிகள் உள்ளன. ஒருவருக்குப் பிரச்சனை ஏற்பட்டால், அதைச் சரி செய்ய அரசியலமைப்பு வழிகளைப் பயன்படுத்த வேண்டும்

தாலிபான்
தாலிபான்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள நாம் அண்டை மாநில நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். மத அடிப்படைவாதத்தின் பெயரால் பிரிவினையைச் சந்தித்த ஒரு தேசம் அதைப் புறக்கணிக்க முடியாது. இதுபோன்ற மனநிலை கொண்ட நபர்கள் நாட்டிற்குள் நுழைகின்றனரா என்பதைக் கண்டறிவது முக்கியம். நாட்டில் நடக்கும் சில சம்பவங்கள் அவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா? தேச துரோக சம்பவத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய வேண்டியது அவசியம்,

இருட்டடிப்பு
நாடு முழுவதும் உள்ள மக்கள் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள். ஆனால் அனைவரின் தியாகமும் பேசப்படவில்லை. சுபாஷ் சந்திர போஸின் ராணுவ செயல்பாடுகள் பேசப்படவில்லை. ஆர்எஸ்எஸின் பங்களிப்பு முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியில் டாக்டர் ஹெட்கேவார் ஓராண்டு சிறையிலிருந்தார். இதுபோன்ற தகவல்கள் முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டன.

பிரிவினை
சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் போஸ், பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா போன்றவர்கள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், 1947க்கு முன்பே இந்தியா ஒன்றாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பிரிவினை குறித்தும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பயங்கரவாதமோ பயங்கரவாத தாக்குதலோ நாட்டில் மீண்டும் ஏற்படாது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications